ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறமுடியாமல் முன்பதிவு செய்தவர்கள் தவிப்பு! ஆக்கிரமித்த அன்ரிசவ்ர்டு பயணிகள்
சென்னை: சென்னை - ஹவுரா ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் ஏற முடியவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது எனவும், ஹவுரா ரயில் பயணிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தெற்கு ரயில்வே விசாரணை நடத்த வேண்டுமென திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை, முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் கூட இட நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக ரயில்வே திணறி வருகிறது.

மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிவதால் பல மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஏசி அல்லாத முன்பதிவு பெட்டிகளில் நடைபெற்று வந்த அன்ரிசவ்ர்டு பயணிகளின் ஆக்கிரமிப்பு தற்போது ஏசி கோச்சுகள் வரை நீண்டு இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பீகார், குஜராத் மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிருந்து வரும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொலைதூர வண்டிகளில் இட நெருக்கடி காரணமாக அவர்கள் ஏசி கோச்களில் தஞ்சம் புகுகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற தென் மாநிலங்களுக்கும் வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏசி கோச்களில் வட மாநில தொழிலாளர்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் ரயில் நிலையங்களில் மற்ற பயணிகளை ஏறவிடாமல் இறங்கவிடாமலும் தாழ்ப்பாள் போட்டுக் கொள்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டிக்கெட் கேட்கும் பரிசோதகர்களை கத்தியால் குத்திய சம்பவம் கூட நடைபெற்றது. வட மாநிலங்களில் தான் இந்த நிலை என்றால் சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் ரயில்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று சென்னையில் அரங்கேறியுள்ளது.
நேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைமேடைக்கு ரயில் காலி பெட்டிகளுடன் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அன் ரிசர்வ்டு டிக்கெட் எடுத்த வடமாநில பயணிகள் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளுக்குள் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பெட்டிகளில் ஏறியதால், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் பல பயணிகள் சென்னை-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் மெயிலில் ஏற முடியவில்லை. பல பெட்டிகள் பெரும்பாலும் டிக்கெட் இல்லாத பயணிகள் அல்லது முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வைத்திருந்த பயணிகளால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டன.

முழு கோட்டும் நிரம்பியிருந்த நிலையில் பல பயணிகள் வழியை மறைத்துக் கொண்டு சாமான்களுடன் அமர்ந்து கொண்டிருந்தனர். மேலும் யாரும் உள்ளே நுழைய முடியாத படி கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டத்தை கடந்து செல்ல முடியாமல் நீண்ட பயணத்தில் நகரவோ, படுக்கவோ, கழிப்பறையை பயன்படுத்தவோ முடியாமல் சிரமத்திற்குள்ளாயினர்.
பயணச்சீட்டு பரிசோதகர், நிலைய மேலாளர், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் டிக்கெட் கன்பாஃர்ம் ஆன பயணிகள் ரயிலை தவறவிட்டுள்ளனர். மேலும் பலர் குடும்பத்துடன் பிளாட்பாரத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது.
இந்நிலையில் ஹவுரா ரயில் பயணிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தெற்கு ரயில்வே விசாரணை நடத்த வேண்டுமென திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "முன்பதிவு செய்த பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் இருக்கைகள் கிடைக்காமல் தவிப்பதும் இது முதல் முறை அல்ல.
ரயில் சேவை பரிதாபகரமான நிலையில் இருப்பதற்கு ரயில்வே அமைச்சகத்தின் அலட்சியமான செயல்பாடே காரணம். முன்பதிவு பயணிகள் பயணிக்க முடியாதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாது, பாதுகாப்பு பிரச்சனையையும் ஏற்படுத்தக் கூடியது. மேலும் ஹவுரா ரயில் பயணிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தெற்கு ரயில்வே விசாரணை நடத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications