"குலைத்துக் கொண்டே இருக்கும்".. திமுக புள்ளிக்கு குறி வைத்த பாஜக? பாய்ந்து வந்த எம்பி.. புல் ஸ்டாப்!
சென்னை: திமுக எம்பிக்கள் சிலரை பாஜக தங்கள் பக்கம் இழுக்க போவதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு தற்போது திமுக எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
சேலத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கு தான் அழைக்கப்படுவது இல்லை என்று சேலம் திமுக எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் சமீபத்தில் குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.
சேலத்தில் சமீபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூர மங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, இ கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று திமுக எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் குற்றஞ்சாட்டி இருந்தார்.

என்ன சொன்னார்?
இது தொடர்பாக அவர் வைத்த குற்றச்சாட்டில் சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால்,அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள்,கழகத்தோழர்கள்,நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி.

கோபம்
மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்.என்னை புறக்கணிப்பது,எனக்கு வாக்களித்து 20 இலட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று ! இதை சம்மந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் !!, என்று எஸ்.ஆர் பார்த்திபன் தனது ட்விட்டர் போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்
இந்த நிலையில்தான் இவர் தேமுதிகவில் இருந்து திமுக வந்தவர்கள் என்பதால் திமுக நிர்வாகிகள் இவரை புறக்கணிப்பதாக செய்திகள் வந்தன. திமுக நிர்வாகிகள் இவரை பெரிதாக கண்டுகொள்வது இல்லை. சேலம் மாவட்ட திமுக மா.செ.க்களுக்கும் பார்த்திபனுக்கும் உரசல் போக்கு நீடித்தப்படியே இருப்பதாக செய்திகள் வந்தன. முக்கியமாக தேமுதிகவிலிருந்து வந்து எப்படியோ சீட் வாங்கி ஜெயித்து விட்ட கோபம், திமுக மா.செ.க்களுக்கு இருக்கிறது. 2024-ல் மீண்டும் எம்.பி.சீட்டை பெற்று விடக்கூடாது என்று இப்போதே சேலம் மாவட்டத்தின் உடன்பிறப்புகள் காய்களை நகர்த்தி வருகிறார்கள் என்றும் செய்திகள் வந்தன.

பாஜக பிளான்
இதை பயன்படுத்தி பாஜக இவரை தூக்க போவதாக செய்திகள் வந்தன. திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கூட்டணி கட்சி எம்பிக்களையும், மாற்று கட்சியில் இருந்து திமுக வந்து பின்னர் வென்ற எம்பிகளையும் பாஜக குறி வைத்துள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சேலம் எம்பி எஸ் . ஆர் பார்த்திபன் அடக்கம் என்று கூறப்பட்டது. இவரிடம் பாஜக பேசி வருவதாகவும் செய்திகள் வந்தன. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாய்ப்பு
இதை பயன்படுத்தி 2024 லோக்சபா தேர்தலில் இவருக்கு திமுக வாய்ப்பு கொடுக்காது என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் இது போன்ற தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் எஸ். ஆர் பார்த்திபன் ட்விட் ஒன்றை செய்துள்ளார். சூரியனைப் பார்த்து நாய்கள் குலைத்துக் கொண்டே இருக்கிறது. வதந்திகளுக்கு இதுவே என் பதில் என்று பதில் அளித்துள்ளார். இவர் நேரடியாக கட்சி மாறும் சர்ச்சை பற்றி பேசவில்லை என்றாலும் மறைமுகமாக வதந்திகளுக்கு இதுவே என் பதில் என்று கூறி சர்ச்சைகளுக்கு புல் ஸ்டாப் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications