முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்குவம் பெறவில்லை... எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஒற்றுமை எண்ணமே இல்லாத இரக்கமற்ற மனப்பான்மை கொண்ட முதலமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது ஒரு கெட்ட வாய்ப்பு என ஸ்டாலின் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மிகுந்த வேதனை
கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு - அனைவருடைய வாழ்வும் செய்வதறியாது ஸ்தம்பித்து நிற்கின்ற நெருக்கடி மிகுந்த நிலையிலே கூட, அ.தி.மு.க. அரசும், முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும் 'பேரிடரை' ஒரு வாய்ப்பாகக் கொண்டு, நாகரிக சமுதாயம் சிறிதும் ஏற்கவியலாதவாறு, 'அரசியல்' செய்து வருவது கண்டு, நடுநிலையாளர்கள் மிகுந்த வேதனை கொண்டுள்ளனர்.

முதல்வரே காரணம்
பிரதமரின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் 'சுய ஊரடங்கு' மார்ச் 22-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு, அடுத்து 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகும் - தி.மு.க. சார்பில் எவ்வளவோ வலியுறுத்தியும், தமிழ்நாடு சட்டமன்றத்தை நடத்திக் கொண்டிருந்தது முதலமைச்சர் திரு. பழனிசாமிதான்.
பெற்றோர், மாணவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே, 8.35 லட்சம் மாணவர்களை 24.3.2020 அன்று ப்ளஸ் டூ தேர்வு எழுத வைத்ததும் அவர்தான்!
பிரதமரின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் 'சுய ஊரடங்கு' மார்ச் 22-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு, அடுத்து 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகும் - தி.மு.க. சார்பில் எவ்வளவோ வலியுறுத்தியும், தமிழ்நாடு சட்டமன்றத்தை நடத்திக் கொண்டிருந்தது முதலமைச்சர் திரு. பழனிசாமிதான்.
பெற்றோர், மாணவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே, 8.35 லட்சம் மாணவர்களை 24.3.2020 அன்று ப்ளஸ் டூ தேர்வு எழுத வைத்ததும் அவர்தான்!

அனைத்துக் கட்சி கூட்டம்
"அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசியல்" என்று, தி.மு.க.,வின் கோரிக்கைக்கு "சுயநல நோக்குடன்" பதில் சொன்ன முதலமைச்சர், 3.4.2020 அன்று தலைமைச் செயலாளர் மூலம் அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தரவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்களுடன் அமர்ந்து 10.4.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியவர் இதே முதலமைச்சர்தான்.

உணரவில்லை
அமைச்சர்கள், அதிகாரிகள் என்று 40-க்கும் மேற்பட்டவர்களை ஒரே அறையில் அமர வைத்து, 11.4.2020 அன்று அமைச்சரவைக் கூட்டத்தையே முதலமைச்சர் நடத்தியிருக்கிறார். இத்தனை கூட்டங்களையும் நடத்திய போது முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு தெரியவில்லை. ஆலோசனைக் கூட்டம் நடத்துவதால், "யாருக்காவது நோய்த் தொற்று இருந்தால் மற்றவர்களுக்கும் பரவும்" என்பது தெரியவில்லை; மத்திய - மாநில அரசுகளின் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை உணரவில்லை.

ஆணவம் கூடாது
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் "அனைத்துக் கட்சிக் கூட்டம்" என்று அறிவித்ததும், மேற்கண்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, சென்னை மாநகரக் காவல்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்க வைத்து - அப்பட்டமான - அநாகரிகமான அரசியலைச் செய்திருக்கிறார் முதலமைச்சர் திரு. பழனிசாமி. ஜனநாயகம் மிக வலிமையானது; இப்படி ஆணவத்திற்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும், பக்குவம் பெறாத அரசியலுக்கும் தக்க தருணத்தில் நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை!

மக்களிடம் வரவேற்பு
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 1 கோடி ரூபாயை தன்னிச்சையாக எடுத்துக் கொள்வது, தி.மு.க.,வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தடுப்பது, பாதிக்கப்பட்டோருக்கு தி.மு.க. வழங்கும் உணவு மற்றும் நிவாரண உதவிகளை தடை செய்வது எல்லாமே, ஊரடங்கு நேரத்தில் தி.மு.க. ஆற்றி வரும் - பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் - மக்கள் பணியை எப்படியாவது தடுக்கும் உள்நோக்கம் கொண்டது. சீர்கெட்ட அந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.












Click it and Unblock the Notifications