தூக்கத்தை துறந்த ஸ்டாலின்... விடிய விடிய நிர்வாகிகளிடம் களநிலவரங்களை கேட்டறிந்தார்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு முழுவதும் தூக்கத்தை துறந்து நிர்வாகிகளிடம் கள நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு மற்றும் வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வறுபுறுத்தியன் பேரில் வெறும் 3 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கியுள்ளார்.
நேற்று மட்டும் இரண்டு முறை தாமே நேரில் சென்று முறையிட்டும் ஆணையர் பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காதது மு.க.ஸ்டாலினை கொதிப்படைய செய்துள்ளது.

வெகுண்டெழுந்து
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி 26 மணி நேரத்தை கடந்தும் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று பிற்பகல் முதலே நடப்பது நல்லதாக தெரியவில்லை என பல மாவட்டச் செயலாளர்களும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு புகார் கூறியுள்ளனர். இதையடுத்து வெகுண்டெழுந்த அவர் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து முறையிட சென்றார்.

2-வது முறை
ஆனாலும், நேற்று இரவு வரை ஸ்டாலின் புகார் மீது மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் நள்ளிரவில் தேர்தல் ஆணையரை 2-வது முறையாக நேரில் சந்தித்த ஸ்டாலின், பல ஆதாரங்களை காட்டி கடுமையாக சீறியுள்ளார்.

2 பழனிசாமி
தேர்தல் ஆணையரை சந்தித்துவிட்டு நேராக அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலின், அதிகாலை 2 மணி வரை மாவட்டச் செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகளுடன் அலைபேசி மூலம் பேசி கள நிலவரங்களை கேட்டபடியே இருந்துள்ளார். மேலும், இரண்டு பழனிசாமிக்களும் சேர்ந்து கூட்டு மோசடி செய்வதாக கொந்தளித்துள்ளார்.

உடல் நலம்
இந்நிலையில், தாங்கள் இது தொடர்பாக பார்த்துக்கொள்வதாகவும் நீங்க ஓய்வெடுங்கண்ணே காலையில் பார்த்துக்கொள்வோம் என வழக்கறிஞர் அணியை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் யோசித்த அவர் துரைமுருகன், டி,ஆர்.பாலு ஆகியோர் வற்புறுத்தியதால் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின் 3 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications