கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன்...! -மு.க.ஸ்டாலின் மடல்
சென்னை: கீழடியை நேற்று நேரில் பார்வையிட்ட நிலையில் தனது அனுபவத்தை திமுக தொண்டர்களுக்கு மடலாக எழுதியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.
கீழடியை கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள மடலில் கீழடியின் பெருமைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவருக்கு அங்கிருந்த தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு குறித்து விவரமாக விளக்கியதாகவும், அதனை தொண்டர்களிடம் பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய மடலில்,
கீழடியில் தான் நின்றிருந்தேன். மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயான் விண்கலம் போலே வான் வரை பறந்து உயர்ந்து சென்றது. உங்களில் ஒருவனான எனக்கு மட்டும் கிடைத்திருக்கும் பெருமை அல்ல இது. உங்கள் ஒவ்வொருவருக்குமான பெருமை. தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தரணிபோற்றும் பெருமை.
ஒரு சின்ன மாநிலம்.. ஒரே ஒரு தொகுதி.. அதுக்கு இடைத் தேர்தல்.. 3 கட்சி.. 300 பிரச்சினைகள்!
பெருமை
இலக்கியங்கள் காட்டிய தொல் தமிழர் பெருமை பற்றிய சான்றுகள் அகிலத்தார்க்கு மெய்ப்பித்திருக்கின்றன கீழடி அகழ்வாய்வுகள். காண அரிய சான்றுகள் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. கீழடியில் நான்காம் கட்ட ஆய்வினை மேற்கொண்ட தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை வெளியிட்டஅறிக்கையினை உடனடியாகப் பாராட்டியதுடன், தொல் தமிழர் பெருமையைப் பறை சாற்றும் அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.
ஆவல்
இது நம் மொழி-இன பண்பாட்டு- நாகரிகப் பெருமை என்பதுடன், தமிழர்தம் பொருள் பொதிந்த வாழ்வியல் குறித்த வரலாற்று உண்மைகள் மண்மூடி மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே முதன்மையானதாகும். அதனால்தான் அகழ்வாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கண்டறிந்து மகிழும் ஆவல் முகிழ்த்தது.
அனுபவம்
வேளாண்மை போற்றிய சங்கத் தமிழர்கள் பசு, எருமை, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்திருப்பதையும், உணவுக்காக விலங்குகளைப் பயன்படுத்தியிருப்பதையும் ஆய்வுகளில்அறிய முடிந்திருக்கிறது. இரும்பினால்ஆன பொருட்கள், தங்கத்தால் ஆனஅணிகலன்கள் அனைத்திலுமே கலைமிளிரும் வேலைப்பாடுகள் மிகுந்திருந்தன.
நம்பிக்கை
நாம் எதிர்க்கட்சிதான். ஆனாலும் மக்கள் நம்மீது மாறாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்றும் அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக நமது கடமையைத் தொடர்ந்து செம்மையாக நிறைவேற்றி வருகிறோம். கீழடியிலும் நமக்கான கடமைகள் நிறையஇருக்கின்றன.
காலம் கனியும்
கீழடியில் மட்டுமல்ல, நம்முடைய தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும் செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள். அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் கடமையாகும். பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அதை வலியுறுத்துவோம், பாதுகாக்கின்ற பொறுப்பை மேற்கொள்ளும் காலமும் கனிந்து வரும்; அப்போது அகிலம் அகம்மிக மகிழ்ந்திடும் வண்ணம் அந்தப்பொறுப்பை ஆற்றலுடன் நிறைவேற்றுவோம் எனக் கூறியுள்ளார்.