பேராசிரியர் அன்பழகன் பேனாவால் கையெழுத்து... ராஜேஷ்குமாருக்கு இந்த பேனா கிடைத்தது எப்படி..?
சென்னை: திமுக ராஜ்யசபா வேட்பாளர் ராஜேஷ்குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த போது, மறைந்த பேராசிரியர் அன்பழகன் பயன்படுத்திய பேனாவில் கையெழுத்திட்ட நிகழ்வு திமுகவினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ராஜேஷ்குமார் கையெழுத்திட்ட போது அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனித்துக் கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் அன்பழகன் பயன்படுத்திய பேனா, ராஜேஷ்குமாருக்கு எப்படி கிடைத்தது அதை யார் கொடுத்திருப்பார்கள் என்பது குறித்தெல்லாம் விவாதித்து திமுக வி.ஐ.பி.க்களின் வாட்ஸ் அப் குழுக்களில் சாட் நடக்கிறது.

வேட்பு மனு
திமுக ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமார் முறைப்படி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார். இந்நிலையில் இவர் தனது வேட்பு மனு தாக்கலின் போது மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பயன்படுத்தி வந்த இங்க் பேனாவில் கையெழுத்திட்டார். இந்த பேனாவை அன்பழகன் குடும்னத்தினரே ராஜேஷ்குமாருக்கு பரிசாக கொடுத்திருக்கின்றனர்.

நட்பு
இவ்வளவு தூரம் ராஜேஷ்குமார் மீது பேராசிரியர் அன்பழகன் குடும்பத்தினர் பாசம் வைத்திருக்க காரணம் அவரது தாத்தா கே.ஆர்.ராமசாமி தான். ஆம், 1967-ம் ஆண்டு திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதிக்கு கே.ஆர்.ராமசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பிறகு அண்ணா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அன்பழகனுக்கு வழி விட்டு ஒதுங்கினார். அப்போது முதலே பேராசிரியர் அன்பழகனின் நெருங்கிய நண்பரானார் ராமசாமி.

நினைவுப்பரிசு
இதனிடையே தாத்தா ராமசாமி மறைவுக்கு பிறகும் அவரது பேரனான ராஜேஷ்குமார் பேராசிரியர் அன்பழகன் குடும்பத்தினருடனான நட்பை பேணினார். இந்நிலையில் பேராசிரியர் அன்பழகன் மறைவை அடுத்து அவர் பயன்படுத்திய பேனாவை அவரது மகன் அன்புச்செல்வன், ராஜேஷ்குமாரை அழைத்து நினைவுப்பரிசாக கொடுத்திருக்கிறார். அந்த பேனாவை பாதுகாப்பாக பராமரித்து வரும் ராஜேஷ்குமார் செண்டிமெண்டாக வேட்புமனுவில் அந்த பேனாவில் கையெழுத்திட்டுள்ளார்.

கட்சி முன்னணியினர்
பேராசிரியர் அன்பழகனின் பேனா ராஜேஷ்குமாரிடம் இருப்பது திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கே இப்போது தான் தெரியவந்தது. இதையடுத்து பலரும் ராஜேஷ்குமாரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேராசிரியரின் பேனா வரலாற்றை கேட்டு அறிந்துகொள்வதோடு வாழ்த்தும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications