ஸ்டாலின் முன்னிலையில் திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் மாநிலங்களவைக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, விஜிலா சத்தியானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பா, டிகே ரங்கராஜன் ஆகியோரது பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரு எம்பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் வீதம் அதிமுக, திமுக தலா 3 எம்பிக்களை தேர்வு செய்து கொள்ளலாம். தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் மார்ச் 6ம் தேதி (இன்று) முதல் 13ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தியூர் செல்வராஜுக்கும் என் ஆர் இளங்கோவுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார் திமுக தலைவர் தலைவர் ஸ்டாலின்.
இவர்கள் மூன்று பேரும் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனிடையே அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.