திமுக பற்ற வைத்த நெருப்பு.. கனவிலும் நினைத்திருக்க மாட்டார் ஓபிஎஸ்.. அதிமுகவிற்கும் சிக்கல்
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விடுவிக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், திமுகவின் ஆர்எஸ் பாரதி எழுப்பிய கேள்விக்கு பின்னர் மீண்டும் வழக்கில் சிக்கி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஓபிஎஸ் மீது வழக்கு தொடர்ந்து தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதேபோல் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றமும் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது

இந்நிலையில் திமுக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் பொன்முடி ஆகியோர் சொத்துகுவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 3 அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்து பதில் அளிக்க உத்தரவிட்டார்.
திமுக அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ததற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசியது போது, "திமுக சார்பில் நான் தொடர்ந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி டெண்டரில் ரூ.3600 கோடிக்கு ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளன என்று 2018-ல் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். உடனடியாக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு மீண்டும் இதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று சொல்லி தீர்ப்பு கூறினார்.
கடந்த 18.07.2023 அன்று இதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ரூ.3600 கோடி அளவுக்கு ஊழல் நடந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்ட ஒன்றில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிற வேலை. நீதிமன்றத்தை அரசியலுக்கான விளையாட்டு மைதானமாக மாற்ற வேண்டாம் என்றார்.
ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து அதே நீதிபதி, வெறும் 44 லட்சம் ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில், அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மீது வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடுவேன் என்று கூறியுள்ளார். அதேபோல பொன்முடி மற்றும் தங்கம் தென்னரசு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தனது பொன்னான நேரத்தை செலவழித்து விசாரிக்கும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்கள், எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ, அதே முகாந்திரத்தின் அடிப்படையில்தான் திமுக அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இன்றைக்கும் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் எம்எம்லஏவாகத்தான் உள்ளனர். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற நீதிபதியான அவர், குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் குறித்த வழக்குகளை மட்டும் எடுத்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது என்றால், இதுபோல விசாரித்த நீதிமன்றத்துக்கும், நீதிபதிக்கும் இருக்கிறது. ஆனால், பாகுபாடு பார்த்து விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்பதுதான் விதி. எனவே, இதை உச்ச நீதிமன்றத்தில் இதையெல்லாம் ஒரு கோரிக்கையாக வைத்து வாதிடுவோம். நீதிமன்றத்தின் மீது திமுகவுக்கு நம்பிக்கை உள்ளது. சட்ட ரீதியாக வழக்குகளை எதிர்கொள்வோம்" என ஆர்எஸ் பாரதி கூறினார்.
இந்நிலையில் ஆர்எஸ் பாரதியின் இந்த பேட்டி வெளியான பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் ஓ பன்னீர்செல்வத்தின் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை, ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஓபிஎஸ் வழக்கு என்ன: வருமானத்துக்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஒ.பி.எஸ் உளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரித்த, சிவகங்கை மாவட்ட சிறப்பு நீதிமன்றம், 2012 ஆம் ஆண்டில் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடைமுறைகள் குறித்து கடுமையாக குற்றம் சாட்டினார்.
குற்ற வழக்கு விசாரணை நடைமுறை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்றும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டம் பொருந்தாது என அறிவித்து விடலாம் எனவும் நீதிபதி சாடினார். மேலும், அதிகாரவரம்பு இல்லாத தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு, உயர்நீதிமன்றம் வழக்கை மாற்றியுள்ளதாகவும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பிரச்சனைகள் உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிபுத் துறை செயல்படுவதாக கூறினார்.
லஞ்ச ஒழிப்புத் துறை அரசியலில் இருந்து விலகி செயல்பட வேண்டும் என்றவர், 2012ல் பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார். லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது என்றும், ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை மீது குற்றம் சுமத்திய நீதிபதி, லஞ்ச ஒழுப்பு துறை கொண்டு வந்ததற்கான நோக்கமே சிதைந்து விட்டதாக தெரிவித்தார்.
இதற்கு நீதிமன்றங்களும் துணைபோவதாக கூறிய நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக 372% சொத்து சேர்த்ததாக அறிக்கை தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்பு துறை பிறகு புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.
மேலும், ஓ.பி.எஸ் மீது வழக்கு தொடர அனுமதி தந்ததை திரும்ப பெற்று கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும், சபாநாயகர் தன்னை நீதிபதி போல் கருதி முடிவெடுக்க முடியாது எனவும் நீதிபதி கருத்து கூறினார். இதேபோல, வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று வழக்கு விசாரணையின் போது தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட வழக்குகளை மறு ஆய்வுக்கு எடுத்து விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போது, முன்னாள் முதல்வரான ஒ. பன்னீர் செல்வம் மீதான வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது திமுக மற்றும் அதிமுகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications