இனிமே உதயநிதிதானா?.. மேயர் தேர்தல் நெருங்க நெருங்க பெரிதாகும் பிரச்சனை.. கொதிக்கும் திமுக தலைகள்!
சென்னை: சென்னை மேயர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் நிற்க வைக்கப்படலாம் என்று செய்திகள் வருகிறது. திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் இதனால் கோபத்தில் இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. எப்போது வேண்டுமானலும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது அதிக மேயர் பதவியை வெல்ல வேண்டும். அதிமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. இதில் மேயர் தேர்தல் இந்த முறை மறைமுக தேர்தலாக நடத்தப்பட உள்ளது.

எத்தனை கவுன்சிலர்
இந்த நிலையில் சென்னையில் அதிக கவுன்சிலர்களை வென்றால் அங்கு மேயர் பதவிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நிறுத்த திமுக திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஏற்கனவே சில திமுக உறுப்பினர்கள், ஸ்டாலினிடம் மனு அளித்து இருக்கிறார்கள். உதயநிதியை மேயர் பதவியில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

வடசென்னை
லோக்சபா தேர்தலின் போதே வடசென்னை அல்லது தென் சென்னை தொகுதியில் உதயநிதியை நிற்க வைக்க முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால் அப்போது திமுக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஆனால் உதயநிதி அந்த தேர்தல் முழுக்க தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இது அந்த கட்சிக்கும் பெரிய பலன் கொடுத்தது.

மேயர் பதவி
இந்த நிலையில்தான் தற்போது உதயநிதியை மேயராக்க திமுகவில் சிலர் முயன்று வருகிறார்கள். எதிர்காலத்தில் உதயநிதிதான் கட்சியில் முக்கிய பொறுப்பிற்கு வருவார். அதற்கு மேயர் பதவி நல்ல வழியாக இருக்கும். திமுக தலைவர் ஸ்டாலின் வளர்ந்ததும் மேயர் பதவி மூலம்தான் என்று சிலர் கட்சிக்குள் வாதம் வைக்கிறார்கள்.

அடுத்தகட்ட தலைவர்கள்
உதயநிதி ஸ்டாலினும் கட்சியில் முக்கிய தலைவர்கள் சிலருக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். அதாவது துரைமுருகன் மகன் தொடங்கி பல அடுத்த கட்ட தலைவர்கள் உடன் உதயநிதி நெருக்கமாக இருக்கிறார். எதிர்காலத்தில் திமுகவில் இவர்கள் முக்கிய தலைவர்களாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது.

போஸ்டர் அரசியல்
இதற்கு இடையில் நேற்று உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளின் போது நிறைய போஸ்டர்கள் சென்னையில் ஒட்டப்பட்டு இருக்கிறது. அதில் பல போஸ்டர்கள் உதயநிதியை சென்னையின் வருங்கால மேயர் என்று அழைத்துள்ளது. இதுதான் தற்போது திமுகவின் மூத்த உறுப்பினர்கள் சிலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

என்ன அதிர்ச்சி
ஆம், திமுகவின் மூத்த மாவட்ட செயலாளர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். உதயநிதிக்கு கட்சியில் அதிகமாக மதிப்பு கொடுக்கப்படுகிறது. மூத்த உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் புலம்பி இருக்கிறார்கள். ஆனால் உதயநிதி தன்னுடைய பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக கொண்டாடும்படிதான் உத்தரவிட்டு இருந்தார்.

உண்மை என்ன
இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த நினைத்து சிலர் இப்படி வதந்திகளை கிளப்பி விட்டு இருக்கலாம் . முன்னாள் அமைச்சர் ஒருவருக்குத்தான் திமுக மேயர் பதவியை அளிக்க திட்டமிட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications