ஆற்காடு வீராசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்? பின்னணி இது தான்!
சென்னை: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் பொருளாளருமான ஆற்காடு வீராசாமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் கழிவறைக்கு செல்லும் போது கால் தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது மகனும் வட சென்னை எம்.பி.யுமான கலாநிதி வீராசாமி, சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருவதும் அவர் ஒரு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் என்பதும் கவனிக்கத்தக்கது.

திமுக சீனியர்
திமுகவில் தற்போது இருக்கும் சீனியர்களில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் ஆற்காடு வீராசாமி. கடந்த திமுக ஆட்சிக்காலங்களில் சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர். கருணாநிதியின் நிழல் போல் அவருடன் ஒன்றாக ஒரு காலத்தில் பயணித்தவர் ஆற்காடு வீராசாமி. இதனிடையே கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி வயது முதிர்வு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் வீட்டில் கழிவறைக்கு செல்லும் போது, கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னை வடபழநியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக ஏற்கனவே ஆற்காடு வீராசாமி உடலளவில் தளர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பங்கேற்பு
மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற நிகழ்வில் தள்ளாத வயதிலும் வந்து அதில் கொலந்துகொண்டவர் ஆற்காடு வீராசாமி. மு.க.ஸ்டாலின் திமுகவின் பொருளாளராக வர வேண்டும் என வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல், தன்னிடம் இருந்த அந்தப் பதவியை ராஜினாமாவும் செய்தவர் ஆற்காடு வீராசாமி. இதன் காரணமாக அவர் மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எப்போதுமே தனிப்பாசம் உண்டு.

நலம் விசாரிப்பு
மேலும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கூட, ஆற்காடு வீராசாமியை அவரது இல்லம் தேடிச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ஸ்டாலின். இந்தச் சூழலில், ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் முதலமைச்சருக்கும் தெரியப்படுத்தியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications