புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஸ்டாலின் ஆவேசம்.. முதல்வர், அமைச்சர் பதிலை ஏற்க மறுப்பு.. வெளிநடப்பு
சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு அரசு மறுப்பதாக குற்றம் சாட்டி சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்றிருப்பதை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.
மறைமுகமாக இது இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் என்று திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் பாமகவுடன் விசிக கூட்டணி என்பதே கிடையாது: திருமாவளவன் திட்டவட்டம்
கவன ஈர்ப்பு
இதுதொடர்பாக சட்டசபையில் இன்று திமுக தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் தரப்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நாளையே கூட்டம்
நாளையே சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட திமுக கோரிக்கை விடுத்தது புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்கள் பற்றி விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையினை முன்வைத்திருக்கிறார். இதன் பிறகு நடைபெற்ற வாத விவாதங்களை பாருங்கள்.
செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தில் பின்பற்றப்படும். இதை இந்த அரசு ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டது. புதிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீர்மானம் தேவை
மு.க.ஸ்டாலின்: அரசின் விளக்கத்தை திமுக ஏற்றுக்கொள்கிறது. ஆனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி புதிய கல்விக் கொள்கை பற்றி விவாதித்து அதற்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முதல்வர்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: புதிய கல்விக் கொள்கை பற்றி ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு வாதங்கள் நடைபெற்றன.
திமுக வெளிநடப்பு
முதல்வர் மற்றும் அமைச்சர் பதிலில் திருப்தி அடையாத திமுக இதை கண்டித்து வெளிநடப்பு செய்தது. புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்கு சிறப்பு சட்டசபை கூட்டத்தை கண்டித்து தாங்கள் வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.