தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது... திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே 15-வது சட்டப்பேரவையின் 8-வது கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தையும், வணக்கத்தையும் தமிழில் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்.
இந்நிலையில் ஆளுநர் உரையை தொடங்குவதற்கு முன்பே அவரிடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி ஸ்டாலின் கேள்விகேட்டார். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநடப்பு
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கிய போது, திமுக, காங்கிரஸ், அமமுக, ஐ.யூ.எம்.எல். மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். குடியுரிமைச் சட்டத்துக்கு அதிமுக அரசு ஆதரவு அளித்ததால் அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

முழக்கம்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கருப்புச்சட்டை அணிந்தவாறு பேரவைக்கு வந்திருந்தார். இதனிடையே பேரவைக்குள் நுழைவதற்கு முன்பாக குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து அவர் திடீர் முழக்கம் எழுப்பியதால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டாலின் கோபம்
ஆளுநர் தனது உரையை தொடங்கும் முன்பு அவரிடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் என்ன முடிவெடுத்தீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு பதில் அளிப்பதை தவிர்த்த ஆளுநர் பன்வாரி லால் நீங்கள் சிறந்த பேச்சாளர் என்பது எனக்குத் தெரியும் என ஸ்டாலினிடம் கூறினார். இதையடுத்து மு.க.ஸ்டாலினுடன் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுங்கட்சி
ஆளுநர் உரையை ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கேட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்துவிட்டதால் அவர்களின் இருக்கைகள் காலியாக உள்ளன.












Click it and Unblock the Notifications