ஆளுங்கட்சியில் இருந்தே ஆளை தூக்கிய எடப்பாடி.. ‘டைவ்’ அடித்த மாநில நிர்வாகி.. பயங்கர ஷாக்கில் திமுக!
சென்னை: திமுக மாநில மீனவர் அணி துணை செயலாளர் நசரேத் பசிலியான் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய திமுக நிர்வாகி நசரேத் பசிலியான். இவர் திமுக மீனவர் அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று திடீரென நசரேத் பசிலியான் அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் நசரேத் பசிலியான். இந்தச் சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் உடன் இருந்தார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாநில நிர்வாகி, எதிர்க்கட்சியான அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்ட திமுகவில் நசரேத் பசிலியானுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2024 லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில மாதங்களாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரை அடுத்தடுத்து அதிமுகவில் இணைத்தார்.
திமுகவினர் பலரிடமும் அதிமுக தரப்பு பேசி வருவதாக கூறப்படும் நிலையில், இன்று திமுக மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்துள்ளார். ஆளுங்கட்சியில் இருந்தே மாநில நிர்வாகியை எடப்பாடி பழனிசாமி தட்டித் தூக்கியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையே இன்று முன்னாள் எம்.பி ஆஸ்டின் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த தகவலை ஆஸ்டின் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications