90களின் பிற்பகுதியிலிருந்து-திருத்தியதாக அறிவித்த கர்ணன் பட குழு- உதயநிதி ஸ்டாலின் கடும் அதிருப்தி
சென்னை: கர்ணன் திரைப்படத்தில் கொடியன்குளம் கிராமத்தில் போலீசாரின் ஒடுக்குமுறை சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்படும் ஆண்டு தொடர்பான சர்ச்சை தொடருகிறது. தாம் உட்பட பலரும் சுட்டிகாட்டிய பின்னரும் திருத்தியதாக கர்ணன் படக்குழு சர்ச்சைக்குரிய ஆண்டை மாற்றியதாக அறிவித்தாலும் அதிருப்தி தொடருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில், மாரிசெல்வராஜ் இயக்கிய திரைப்படம் கர்ணன். தென்மாவட்டத்தில் கொடியன்குளம் கிராமத்தில் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி போலீசார் கட்டவிழ்த்துவிட்ட 4 மணிநேர கொடூர ஒடுக்குமுறையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுக்க ஆவி பிடிப்பது மிகவும் நல்லது.. எப்படி தெரியுமா? மருத்துவர்கள் குட்நியூஸ்
கர்ணன் திரைப்படத்தில் பொடியன்குளம் கிராமத்தில் இந்த ஒடுக்குமுறை நிகழ்த்தப்படுவதாக காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1997 முன்பகுதியில் இருந்து என படத்தில் இடம்பெற்றிருப்பதுதான் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
நடந்தது ஜெ. ஆட்சியில்
ஏனெனில் கொடியன்குளம் சம்பவம் நடந்த ஆண்டு 1995-ம் ஆண்டு. அப்போது ஜெயலலிதா முதல்வராக ஆட்சி செய்த அதிமுக ஆட்சிக் காலம். ஆனால் 1995-ம் ஆண்டு என மாரி செல்வராஜ் குறிப்பிடவில்லை. மாறாக 1997-ம் ஆண்டுக்கு முற்பகுதி என குறிப்பிடுவது அப்போது நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி மீது குற்றம்சாட்டுவதைப் போல உள்ளது என்பதுதான் திமுகவினர் குற்றச்சாட்டு.
அதெப்படி திமுக காரணமாகும்?
அதாவது கொடியன்குளம் சம்பவத்துக்கு திமுகவே காரணம் என்பதைப் போல மாரிசெல்வராஜின் கர்ணன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என குமுறி வந்தனர் திமுகவினர். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், கர்ணன்' பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் @dhanushkraja ,அண்ணன் @theVcreations , இயக்குநர் @mari_selvaraj மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன் என கூறியிருந்தார்.
உதயநிதி வேண்டுகோள்
மேலும் 1995-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்' என உறுதியளித்தனர். நன்றி என்றும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருந்தார்.
மாற்றிய கர்ணன் குழு
இதனையடுத்து கர்ணன் திரைப்படக் குழுவினர் 1997 முன்பகுதியில் இருந்து என்பதை மாற்றினர். அதற்குப் பதிலாக 90களின் பிற்பகுதியில் இருந்து என மாற்றம் செய்துள்ளதாக அறிவித்தனர். இதுதான் திமுகவினரை மீண்டும் கோபம் கொப்பளிக்க வைத்தது. 1990-ன் பிற்பகுதி என்றாலும் அப்போதும் திமுக ஆட்சிதானே நடந்தது.. அப்படி இருக்க ஏன் 1995-ல் நடந்த சம்பவம் என்பதை குறிப்பிட இத்தனை தயக்கம்? அதற்கு பேசாமல் எந்த ஆண்டையும் சொல்லாமல் இருந்திருக்கலாமே என மீண்டும் குமுறினர். இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.
அதிருப்தி குரல்கள்
இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர். படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்'90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் விட்டுவிடுவோம்
அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை.அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். திமுக மீதான எத்தனையோ விமர்சனங்களை கடந்து போன அக்கட்சியினர் இப்போது கேள்வி எழுப்பி பதிலடி தரத் தொடங்கியிருப்பது சமூக வலைதளங்களை அதிர வைத்து கொண்டிருக்கிறது.