உதயநிதி மகன் பெயரில் "இன்பநிதி பாசறை" - புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் இருவர் அதிரடி சஸ்பெண்ட்!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரனும் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மகனுமாகிய இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து போஸ்டர் வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் மணிமாறன், திருமுருகன் இருவரும் திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மகனாக இருந்த போதும் திமுகவிலும் சரி திமுக ஆட்சியிலும் சரி படிப்படியாக ஒவ்வொரு படி நிலையாக கட்சி பணியாற்றிய பின்னரே தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி, ஆட்சி பதவிகள் வழங்கப்பட்டன. ஆனாலும் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் திமுகவை நோக்கி வைக்கப்படுகிறது.

அதே போலவே தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் திமுக கட்சிப் பணிகளை மேற்கொண்டு, சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தித்து எம்.எல்.ஏ.வானார். ஆனாலும் வாரிசு அரசியல் விமர்சனத்தை திமுக எதிர்கொண்டு நிற்கிறது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மகன் பெயரில் "இன்பநிதி பாசறை" உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புதுக்கோட்டையில் "இன்பநிதி பாசறை"-யின் சார்பில் செப்டம்பர் 24-ந் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில் "இன்பநிதி பாசறை" அமைத்த திமுக நிர்வாகிகளான புதுக்கோட்டை மணிமாறன், திருமுருகன் ஆகியோர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இன்பநிதி திமுகவில் எந்த பொறுப்பும் வகிக்கவில்லை. விளையாட்டு வீரரான அவர் தீவிர அரசியலில் இயங்கவும் இல்லை. ஆனாலும் திமுக நிர்வாகிகள் ஆர்வ கோளாறு காரணமாக "இன்பநிதி பாசறை" அமைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications