அரசியல்வாதிகளுக்கு பயம் வரும்.. ஓபி ரவீந்திரநாத் வழக்கு தீர்ப்பு.. தங்க தமிழ் செல்வன் மகிழ்ச்சி
சென்னை: ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் பெற்ற வெற்றிகள் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற நினைக்கும் மற்ற அரசியல்வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக -பாஜக படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேனி தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தேனி தொகுதியில் அதிமுக சார்பில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ரவீந்திரநாத்துக்காக தேனியில் பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் வரலாற்றில் தேனி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் யாரும் வந்ததே இல்லை. தேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
தேனி லோக்சபா தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் 1,44,050 வாக்குகள் பெற்றார் தங்க தமிழ் செல்வன். தேர்தல் முடிவுகள் வெளியான போதே ஓ.பி ரவீந்திரநாத்தின் வெற்றிக்கு எதிராக கருத்து கூறினார் தங்க தமிழ் செல்வன். அடுத்த சில மாதங்களில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ் செல்வன். இந்த நிலையில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றியை எதிர்த்து மிலானி என்ற வாக்காளர் மனு தாக்கல் செய்தார். கடந்த மூன்றாண்டு காலமாக நடைபெற்ற வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓபி ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள தங்கத்தமிழ் செல்வன், இந்த தீர்ப்பை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். நாங்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு நீதிமன்றம் மதிப்பளித்துள்ளது. மற்ற அரசியல்வாதிகளுக்கு இது பயத்தை ஏற்படுத்தும் தேர்தல் இனி முறையாக நடைபெறும். நானே கோர்ட்டில் சாட்சியம் கூறினேன். தேர்தல் அதிகாரிகளை மதிக்காமல் ஒரு ஓட்டுக்கு 2ஆயிரம் பணம், வெள்ளிக்கொலுசு கொடுத்தார்கள் பல்வேறு முறைகேடுகளை செய்தனர்.
பல வழிகளில் தவறாக சேர்த்த பணத்தை லஞ்சமாக கொடுத்துதான் வெற்றி பெற்றார்கள் என்று நாங்கள் ஆதாரப்பூர்வமாக முன்வைத்தோம். 76ஆயிரம் வாக்குகள் முறைகேடாக கிடைத்த வாக்குகள், அவருடைய அப்பா துணை முதல்வராக இருந்தார். அதிகாரம் கையில் இருந்தது. பிரதமர் பிரசாரத்திற்கு வந்தார். செல்வாக்கு அதிகம் இருப்பதாக காண்பித்துதான் வெற்றி பெற்றனர் என்றும் கூறியுள்ளார் தங்க தமிழ் செல்வன்.












Click it and Unblock the Notifications