திமுகவை ஆறாவது முறையாக அரியணையில் ஏற்றுவோம் - கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் சபதம்
இரண்டு எதிரிகளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறோம். எதிரிகளை வென்று திமுகவை ஆறாவது முறையாக அரியணை ஏற்றுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது தந்தை நினைவிடத்தில் சபதம் ஏற்றுள்ளார்.
சென்னை: நாளை பற்றிய நம்பிக்கை அளிக்கும் இயக்கம் திமுக இயக்கம். ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்ற உங்கள் நினைவு நாளில் சூளுரைக்கிறோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு 'எங்கெங்கும் கலைஞர்' என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளுடன் மோதிக்கொண்டிருக்கிறோம். இரண்டு எதிரிகளையும் வென்று அடுத்த ஆண்டு இதே நாளில் உங்கள் முன் நிற்போம் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு இடத்திற்கு இன்று காலையிலேயே மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்.

திமுகவினர் பலரும் #எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere என்ற ஹேஸ்டேக்கின் கீழ் கருணாநிதி பற்றிய நினைவுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்டாலின் புதிதாக வீடியோ செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere https://t.co/O9YOTSdG4k
— M.K.Stalin (@mkstalin) August 7, 2020
அதில், இன்னும் இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது நம் உயிரினும் தலைவர் நம்மோடு இல்லை என்பதை. அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு யுகங்களை கடந்தது போல இருக்கிறது. எனது கண்களில் அவரது முகமாகவே இருக்கிறது
எங்கு நோக்கினும் அவரது முகமாகவே இருக்கிறது.
ஜூன் 3 புதிய தமிழ் பிறந்த நாள். ஆகஸ்ட் 7 அவர் மூச்சொலி நின்ற நாள் மட்டுமல்ல எண்ணற்றோர் சுவாசிக்க மறந்த நாள்.
நலமாய் இருக்கிறார் என்ற ஒன்றை சொல்லை கேட்க தவமிருந்தோம்.
13 முறை சட்டமன்ற உறுப்பினர் 5 முறை முதல்வர். தமிழ்நாட்டை வாழ வைத்தவர். திருக்குவளையில் பிறந்த நவீன சிற்பி
கருணாநிதி நிறைவேற்றிய சாதனைகள் நிறையவே இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு அவருடைய பெயர் நினைவு கூறப்படும். முத்தமிழ் அறிஞரின் புகழ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
கருணாநிதி செய்த சாதனைகளை பட்டியலிட்டிருக்கும் ஸ்டாலின், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், திருமண உதவி திட்டம், கல்வி திட்டம், கோவில் திருப்பணிகள், அரசு வேலை வாய்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, நுழைவுத்தேர்வு ரத்து, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கூட்டுக்குடிநீர் திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகள், குமரி முனையில் வள்ளுவருக்கு சிலை. இவை அனைத்தையும் செய்தது ஒரே மனிதர் என்று கூறியுள்ளார்.
அவர் செய்ததில் பத்தில் ஒரு பங்குதான் நான் சொல்லியிருக்கிறேன். பிறக்கும் போதே எழுத்தாளர். நாடகக்கலைஞர் சொந்தமாக எழுதி நாடகங்கள் போட்டவர். அவர் ஒரு சகாப்தம். உலகம் எப்போதும் அவரை கொண்டாடியது. எப்போதும் கொண்டாடக்கூடியவராக இருந்தார். தீயை தாண்டி தென்றலை தீண்ட மக்களுக்கு பாதை காட்டியவர்.
நீங்கள் இட்ட கட்டளையை தொடர்கிறோம் தலைவரே...கொள்கை இல்லை என்றால் உயிரில்லை. இன்றைய தினம் கொள்கையும் தியாகமும் இருக்கிறது. ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம், திமுக நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது.
இனத்திற்கோ, மொழிக்கோ ஒரு தடங்கள் என்றால் முதல் குரல் நம் குரல்தான். கழகத்தை வீழ்த்த எத்தனையோ அவதூறுகள், பொய் புனைவுகள் பரப்பப்படுகின்றன நாங்கள் தீயை தாண்டிக்கொண்டிருக்கிறோம்.
நாளை பற்றிய நம்பிக்கை அளிக்கும் இயக்கம் திமுக இயக்கம். ஆறாவது முறையாக திமுகவை அரியணை ஏற்ற உங்கள் நினைவு நாளில் சூளுரைக்கிறோம், ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளுடன் மோதிக்கொண்டிருக்கிறோம். இரண்டு எதிரிகளையும் வென்று அடுத்த ஆண்டு இதே நாளில் உங்கள் முன் நிற்போம்.












Click it and Unblock the Notifications