மன்னராட்சி கொண்டு வர பார்க்கிறார்கள்.. 4 முதல்வர்கள் இருக்கிறாங்க.. திமுக மீது பாய்ந்த எடப்பாடி
சென்னை: திமுக ஒரு குடும்ப கட்சி. கார்பரேட் கம்பெனி மாதிரி. தமிழகத்திலேயே மன்னராட்சியை கொண்டு வர திமுக முயற்சி செய்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அதிமுக 9 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்தது. இந்த 9 ஆண்டு காலத்தில் தமிழகம் ஏற்றம் பெற்றது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நிறைய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது அதிமுக. ஏழைகளுக்கு பசுமை வீடுகளை கட்டி கொடுத்தார். வயதான தாய்மார்களுக்கு, பெரியவர்களுக்கு, முதியோர்கள் என அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது. முதியோர் உதவித்தொகையை ஜெயலலிதா உயர்த்தி வழங்கியது.

ஏழைகள் குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது. கலைக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள் என அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டு ஏழைகள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்க செய்தது அதிமுக அரசு. இப்படி ஏழைகளுக்கு பார்த்து பார்த்து உதவி செய்தது அதிமுக.
அதிமுக ஆட்சியில், பள்ளி செல்வதற்கு குழந்தைகளுக்கு பள்ளி சீருடை, பேக், விலையில்லா நோட்டு, புத்தகம், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி போன்றவை வழங்கப்பட்டது. இப்போது இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா தான். ஏழை மாணவர்களுக்கு மருத்துவர் ஆவது பகல் கனவாக இருந்தது. இதையும் மாற்றுவதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு 2160 ஏழை எளிய மாணவர்கள் ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் மருத்துவம் படித்து வருகிறார்கள். இது தாங்க சாதனை. கொரோனா காலத்தில் யாரும் வேலைக்கு செல்ல முடியவில்லை. அந்த சூழலில் கூட கிட்டத்தட்ட 11 மாதங்கள் ரேஷனில் விலையில்லா அரிசி, சர்க்கரை, எண்ணெய் வழங்கிய அரசாங்கம் அதிமுக அரசாங்கம்.
கொரோனா நேரத்தில் பொங்கலுக்கு ரூ.2500 கொடுத்தோம். இப்போது திமுக அரசு அமைந்து 2 அரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு அவர்கள் செய்த நல்லது என்ன? என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். எந்த நன்மையும் கிடைக்கல. ஏனென்றால் இது குடும்ப கட்சி. ஒரு கார்பரேட் கம்பெனி மாதிரி.. வரவு செலவு.. லாபம் நஷ்டம் பார்க்கிற கட்சி.
முதலில் கருணாநிதி இருந்தார். அடுத்து ஸ்டாலின் வந்தார். இப்போ உதயநிதி வந்துட்டார். திமுக இளைஞர் மாநாட்டில் உதயநிதி மகன் இன்பநிதியும் வந்துவிட்டார். தமிழகத்திலேயே மன்னராட்சியை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். மன்னராட்சி இருக்கும் போதுதான் தந்தைக்கு பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு மகன்கள் வந்துகொண்டு இருப்பார்கள். இது ஜனநாயக நாடு.
மக்களை பற்றி கவலைப்படவில்லை. இன்றைக்கு அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது. ஒரு முதலமைச்சர் இல்லை.. கிட்டத்தட்ட 4 முதல்வர்கள் இருக்கிறார்கள். இதனால் தான் ஆட்சி திண்டாடிக்கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை தான் நடக்கிறது. கஞ்சா விற்பனை அதிகம் நடக்கிறது. இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். நிர்வாக திறனற்ற ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications