"வம்பு".. உதயநிதியின் சர்ச்சை பேச்சு.. வரிந்து கட்டி வந்த சுஷ்மா மகள்.. கிளம்பியது கிண்டல்!
உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு சுஷ்மா ஸ்வராஜ் மகள் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: சுஷ்மா ஸ்வராஜ் பிரதமர் நரேந்திர மோடியால்தான் உயிரிழந்தார் என்று பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருப்பூரில் திமுக கூட்டணி தலைவர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.. அப்போது, "மூத்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு நான் குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்ததாக பிரதமர் மோடி தாராபுரத்தில் பேசியிருக்கிறார்..
குஜராத்தில் முதல்வராக இருந்து, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடுவை ஓரங்கட்டிவிட்டு குறுக்கு வழியில் முன்னுக்கு வந்தவர் அவர்தான்..
அதிர்வலை
உதயநிதியின் இந்த பேச்சு வழக்கம்போலவே அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.. எப்போதும் தமிழக களத்தில்தான் அதிர்வலை ஏற்படும் என்றால், இந்த பேச்சு இந்திய அரசியலையே அதிர வைத்துள்ளது.. இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் பிரதமர் நரேந்திர மோடியால்தான் உயிரிழந்தார் என்று பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு, சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் தன்னுடைய ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆதாயம்
"உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. உங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக என்னுடைய அம்மாவின் பெயரை பயன்படுத்தாதீர்கள்... என் அம்மாவின் நினைவுகளை உங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.. உங்களின் பேச்சு தவறானவை... பொய்.. பிரதமர் நரேந்திர மோடி எனது தாயாரின் மீது மிகுந்த மரியாதையையும் கவுரவத்தையும் வைத்திருந்தார்.
கடினமான காலம்
எங்களின் கடினமான இருண்ட காலத்தில் பிரதமரும், கட்சியும் எங்களுக்குப் பக்கபலமாக இருந்தது. உங்களுடைய பேச்சு எங்களுக்கு வேதனை அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரையும் டேக் செய்து அவர் இந்த ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.
சர்ச்சை
உதயநிதி தேவையில்லாமல் சுஷ்மா பேச்சை எடுத்திருக்க கூடாது என்றும், இப்போதுதான் லியோனி, ஆ.ராசா என ஒவ்வொருவரும் மன்னிப்பு கேட்டு வரும் நிலையில், இதுபோன்ற சர்ச்சை பேச்சுக்கள் தேவையில்லை என்றும் பரவலான கருத்துக்கள் எழுந்து வருகின்றன.. தேர்தல் நெருங்கும் சமயத்தில், அதுவும் பிரகாசமான வெற்றி வாய்ப்புகளை கையில் வைத்து கொண்டு, இப்படி பேசுவது திமுகவுக்கு கடைசி நேரத்தில் சற்று சறுக்கலாகிவிடும் என்றும் அரசியல் நோக்கர்கள் அலர்ட் செய்து வருகின்றனர்.