அவர் செல்லும் இடமெல்லாம் அவ்வளவு கூட்டம்.. கிளாப்ஸ் அள்ளும் உதயநிதி.. ஸ்டாலினின் மெகா திட்டம்!
திமுகவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீப நாட்களாக அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறார்.
சென்னை: திமுகவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீப நாட்களாக அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறார். பல்வேறு முக்கிய திட்டங்களை முன்னிறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வருகிறார் என்கிறார்கள்.
திமுக கட்சி 2021 சட்டசபை தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் ஆலோசனையின் படி தீவிரமாக அக்கட்சி பல்வேறு மாற்றங்களை, அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் நடந்த திமுக செயலாளர் கூட்டத்தில் கூட இதை பற்றி ஆலோசனை செய்துள்ளனர்.
அதேபோல், திமுக மாநகராட்சி தேர்தலில் எப்படி செயலாற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும் தீவிரமாக இதில் ஆலோசனை செய்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்குள் மிக தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்
இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே அவருக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரும் கட்சிக்குள் தீவிரமாக இளைஞர்களை சேர்க்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார். கடந்த வருடம் திமுகவில் 29 லட்சம் இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர். திமுக 1 வருடத்தில் 30 லட்சம் இளைஞர்களை கட்சியில் சேர்க்க திட்டமிட்டு இருந்தது.

சாதனை
ஆனால் வெறும் 8 மாதங்களில் 29 லட்சம் இளைஞர்களை உதயநிதி ஸ்டாலின் சேர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுகவில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி வருகிறார்கள். உதயநிதி சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். அவர் இளைஞர்களை நன்றாக வழிநடத்துகிறார் என்று சில மூத்த தலைகள் கட்சிக்குள் பாராட்டி இருக்கிறார்கள்.

என்ன பேச்சு
அதேபோல் உதயநிதி கலந்து கொள்ளும் கட்சி கூட்டங்களில் எல்லாம் கிளாப்ஸ் அள்ளுகிறார். நேற்று கரூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி, பாமக எம்பி அன்புமணி என்று எல்லோரையும் மிக கடுமையாக உதயநிதி விமர்சனம் செய்தார்.இவர் பேச்சுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. போகும் இடத்தில் எல்லாம் டைமிங்கோடு பேசும் உதயநிதிக்கு அதிக அளவில் கூட்டம் கூடுகிறது.

என்ன கூட்டம்
அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் இவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இவர் பிரச்சாரம் திமுகவிற்கு பெரிய அளவில் உதவியது. இவர் பிரச்சாரம் செய்த லோக்சபா தொகுதிகளில் எல்லாம் திமுக சிறப்பான வெற்றியை பதவி செய்தது. உதயநிதியின் கிராமசபை கூட்டங்களில் கூட அதிக அளவில் மக்கள் இவருடன் ஆர்வமாக கலந்துரையாடினார்.

அடுத்த கட்ட தலைவர்கள்
திமுகவின் அடுத்த கட்ட தலைவர்கள் என்று கருதப்படும் நபர்களுடன் இவர் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவர்களுடன் இப்போதே உதயநிதி நட்பாகிவிட்டார். அதோடு மிக முக்கியமாக, மாவட்ட செயலாளர்கள் பலருடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பலரை அழைத்து பாராட்டியும் உள்ளார். இப்படி திமுகவிற்குள் உதயநிதிக்கு குட் மார்க் கொடுத்து வருகிறார்கள்.

அடுத்து என்ன
இந்த நிலையில் திமுக சார்பாக 2021 சட்டசபை தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். சென்னையில் ஏதாவது தொகுதியில் இவர் போட்டியிடுவார் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே ஆர்கே நகர் தொகுதி தேர்தல், லோக்சபா தேர்தலில், விக்கிரவாண்டி , நாங்குநேரி தேர்தலில் உதயநிதி போட்டியிடுவார் என்று பேசப்பட்டது. அது நடக்கவில்லை.

கண்டிப்பாக போட்டி
ஆனால் இந்த முறை 2021ல் கண்டிப்பாக உதயநிதி போட்டியிடுவார் என்கிறார்கள். உதயநிதிக்கு மேயர் பதவி கொடுக்க வேண்டும் என்று இன்னொரு பக்கம் கோரிக்கைகள் கட்சிக்குள் எழுந்த வண்ணம் இருக்கிறது. சென்னையில் மாநகராட்சி தேர்தலில் திமுக வென்றால், உதயநிதிக்குத்தான் மேயர் பதவியை கொடுக்க வேண்டும் என்று கட்சிக்குள் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications