நெல் ஈரப்பதம்.. விவசாயிகளின் அழுகுரல் பிரதமருக்கு கேட்கவில்லையா.. மத்திய அரசின் துரோகம்.. ஸ்டாலின்!
சென்னை: நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளிடையே பிரதமர் மோடி உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் இழைக்கப்பட்டதாக பதிவிட்டுள்ள ஸ்டாலின், விவசாயிகளின் அழுகுரல் பிரதமரின் காதுகளுக்கு ஏன் கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அண்மையில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிட வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று கோவை வந்த பிரதமர் மோடி, தென்னிந்திய வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்றார். விவசாயிகளுடன் பல்வேறு ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, பின்னர் விவசாயம் மற்றும் அடுத்தக்கட்ட இலக்குகள் குறித்து பேசி இருந்தார். குறிப்பாக இயற்கை விவசாயம் தொடர்பாக மோடி பல்வேறு கருத்துக்களை அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், உழவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் மோடி வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை.
அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய மத்திய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?
உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications