யார் தலைவன்? தெருவில் கூட்டத்தைக் கூட்டி 41 பேரை கொல்பவன் தலைவனா? கவிஞர் யுகபாரதி கேள்வி
சென்னை: திமுக இளைஞரணி சார்பாக நடத்தப்படும் அறிவுத் திருவிழாவில் சினிமா பாடலாசிரியர் யுகபாரதியின் யார் தலைவன் என்ற பேச்சு சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. ஒரு தலைவன் என்றால் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தெருவில் கூட்டம் போட்டு 41 பேரை கொல்பவன் தலைவனா.. என்றும் யுகபாரதி விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.
திமுக இளைஞரணி தரப்பில் வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த அறிவுத் திருவிழாவில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை கொண்ட உரையாடல்கள், புத்தகக் கண்காட்சி, வீடியோ, உரைகள் என்று பல்வேறு செயல்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் திராவிட இயக்கம் தொடர்பாக சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

அந்த வகையில் பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில், ஒரு தலைவன் என்றால் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தெருவில் கூட்டம் போட்டு 41 பேரை கொல்பவன் தலைவனா.. அப்படியென்று கேட்கிறார்கள் அல்லவா.. 1950களில் மாயவரத்தில் திமுக ஒரு கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் அண்ணா பேச வருகிறார். அதனை கேட்க பெருந்திரளான மக்கள் வருகிறார்கள்.
அந்தக் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக வசூல் செய்து நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு ஆசை இருக்கிறது. மேடையில் அண்ணா அருகில் அமர வேண்டும் என்று ஆசை அவருக்கு இருகிறது. அதில் வசூல் செய்து கூட்டத்தை ஏற்பாடு செய்தவருக்கே மேடையில் அமர முடியாமல் போய்விடும். இதனால் மனசு நொந்துபோய்விடுகிறது. அப்போது ஒரு விரக்தியில் அண்ணாவை காதுபடவே திட்டிவிடுகிறார்.
இவரெல்லாம் ஒரு தலைவரா.. நான்தானே கஷ்டப்பட்டு கூட்டம் நடத்துகிறேன்.. என் அருகில் உட்காரவில்லை.. என்னை சிறிது நேரம் அழைத்து அருகில் அமர வைக்க வேண்டாமா என்கிறார்.. இதனை அண்ணா காதில் வாங்கிக் கொண்டு எதுவும் சொல்லவில்லை. அந்த கூட்டத்தில் மிகச்சிறப்பாக ஒரு மணி நேரம் உரையாற்றுகிறார். அந்த கூட்டத்தை நடத்தியவர் திட்டியது குறித்து எதுவும் பேசவில்லை.
அதன்பின் மேடையில் அமர்ந்த அனைவரையும் அண்ணா உடனடியாக நேரில் அழைத்திருக்கிறார். ஆனால் கூட்டத்தை ஏற்பாடு செய்தவரை மட்டும் அழைக்கவில்லை.. அப்போது மேடையில் அமர்ந்தவர்களிடம் மட்டும் தனியாக பேசி இருக்கிறார். அதில், அந்த தம்பி பேசியது சரிதான்.. நான் வந்து இங்கே பேச வேண்டும் என்றால், இந்த பகுதியில் இந்தக் கட்சியை வளர்க்க வேண்டும் என்று கூட்டம் போட்டுள்ளான்.
யாரையும் தெருவில் நிற்க வைக்கவில்லை.. அனைவருக்கும் நாற்காலி போட்டு கூட்டம் நடத்துகிறான். 4 மணிக்கு நான் வருவேன் என்றால், சரியாக 4 மணிக்கே வர வைத்துவிட்டான்.. இதனால் அண்ணாவை திட்டிவிட்டாயேடா நீ.. என்று அந்த தம்பியை யாரும் திட்டக் கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் அந்த பையன் கட்சியில் இருந்து வெளியேறிடக் கூடாது.
அவனை பக்குவமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் எல்லோரைவிடவும் அவன் மீது எனக்கு பாசம் அதிகம் என்று சொல்லிவிடுகிறார். அதன்பின் 15 ஆண்டுகள்.. 1967ல் தேர்தல் முடிவு வருகிறது.. மாயவரம் வெற்றி என்று பெயர் வருகிறது. அந்த பெயர் கிட்டப்பா.. அண்ணாவை திட்டியவரின் பெயர் கிட்டப்பா..
15 ஆண்டுகளாக ஒரு தொண்டனை பார்த்து பார்த்து பழக்க பயிற்றுவித்து பக்குவப்படுத்தி பண்புடையவனாய் மாற்றி, எந்த மேடையில் இருக்கை கிடைக்கவில்லையோ அவரை சட்டசபை உறுப்பினராக்கினார்.. இப்படி ஒரு தொண்டனை வழிநடத்தி சென்று உயரிய இடத்தில் அமர வைக்கிறாரோ அவர் தான் மாபெரும் தலைவர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications