ஒற்றுமை தேவை.. வருமானவரித்துறைக்கு போட்டுக்கொடுக்காதீங்க... திமுகவினரிடம் துரைமுருகன் அட்வைஸ்
திமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வருமானவரித்துறையினருக்கு போட்டுக்கொடுக்கக் கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை: திமுகவில் உள்ள சிலர் வருமான வரித்துறைக்கு செய்தி சொல்லும் அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். மனக்கசப்பு காட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். நம் அனைவரின் ஒரே லட்சியம் ஸ்டாலினை கோட்டையில் அமரவைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்றும் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எதிர்கட்சியான திமுக ஆட்சியை பிடிக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது திமுக.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்.ஜி.ஆர் யாரைக் காட்டினாலும் அவர் எம்.பி, எம்.எல்.ஏ என்ற நிலை இருந்தது. தமிழக அரசியலில் மகத்தான வல்லமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரையே, லோக்சபா தேர்தலில் ஜீரோ வாங்க வைத்த பெருமை திமுகவைச் சேரும் என்று கூறினார்.
தமிழ்ச் சமுதாயத்தின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடிப்போம்: மு.க. ஸ்டாலின்
வேதனை தருகிறது
பணம் கூட நமக்கு இரண்டாவதுதான். முதலில் நமக்குள் ஒற்றுமை தேவைப்படுகிறது கூறிய அவர், ஒருவருக்கொருவர் காட்டும் மனக் கசப்பு ஸ்டாலின் உள்பட முன்னணி தலைவர்களாகிய எங்கள் அனைவருக்கும் வேதனையைத் தருகிறது என்றார்.
பகைமை வேண்டாம்
திமுகவில் உள்ள சிலர் வருமான வரித்துறைக்கு செய்தி சொல்லும் அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். மனக்கசப்பு காட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தேர்தல் முடியும் வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன் எனவும், யாரையும் போட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் நிர்வாகிகள் உறுதியேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் துரைமுருகன்.
ஒரே லட்சியம்
நம் அனைவரின் ஒரே லட்சியம் ஸ்டாலினை கோட்டையில் அமரவைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் துரைமுருகன். எப்போதுமே வேகத்தோடும் நையாண்டியோடும் பேசும் துரைமுருகன், நேற்றைய தினம் திமுகவினருக்கு அட்வைஸ் செய்யும் விதமாகவே பேசினார்.
இன்கம்டாக்ஸ் ரெய்டு
லோக்சபா தேர்தலின்போது வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு துரைமுருகனுக்கு நெருக்கமானவரின் வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி 10 கோடி ரூபாய் அளவுக்கான பணம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடைபெற்றது. இதனை மனதில் வைத்தே இப்போது தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார் துரைமுருகன்.