முந்தா நாள் தோன்றிய விஜய் கட்சிக்கு 64 வருசமா அரசியலில் இருக்கும் நான் பதில் சொல்லணுமா?: டி.ஆர்.பாலு
சென்னை: தவெக தலைவர் விஜய், திமுக-வை கடுமையாக அட்டாக் செய்து பேசி இருந்த நிலையில், திமுக பொருளாளரும் மூத்த எம்.பியுமான டி.ஆர்.பாலு, விஜய் பற்றிய கேள்விக்கு சூடாக ரிப்ளை கொடுத்துள்ளார்.
திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு. அப்போது, தவெக பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுக ஆட்சியை மன்னராட்சி என விமர்சித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டி.ஆர்.பாலு, "முந்தா நாள் தோன்றிய விஜய் கட்சிக்கு 64 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் நான் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

தவெக பொதுக்குழுவில் விஜய் பேசிய பேச்சு
தவெகவின் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். திராவிட மாடல் என்று சொல்லி தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்களாட்சியை மன்னராட்சி போல் நடத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது என்றும் செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும் என்றும் விமர்சித்த விஜய், "திமுகவின் சீக்ரெட் ஓனர் பாஜக. வரும் தேர்தலில் இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக" என்று ஆவேசமாகப் பேசி இருந்தார்.
ஒண்ணா? ரெண்டா?
அரசியல் என்றால் என்னங்க, ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்பது அரசியலா, இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழகத்தை சுரண்டி நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? எல்லோரும் நல்லா வாழ வேண்டும் என்பது தான் அரசியல். அது தான் நம்ம அரசியல்.
கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம், தினம் மக்கள் பிரச்னையை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னர் ஆட்சி போல நடத்துகிற இவர்கள் செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?" என கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார் விஜய்.
திமுக பதிலடி
முன்னதாக விஜய் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "பிறந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகாமல் தவழ்ந்து வரும் குழந்தைக்கும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற திமுகவுக்கும் போட்டியா? எங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. விஜய் யாருடைய பி டீம் என்பது போக போகத் தெரியும்" என்று தெரிவித்தார்.
திமுக எம்.பி கனிமொழி இதுதொடர்பாக பேசுகையில், எல்லோரும் திமுகவைதான் போட்டியாக நினைக்கிறார்கள். ஆனால் திமுகவிற்கு யாரும் போட்டி இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வேறு எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், "திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும். கொள்கையில் உறுதியாக இருக்கும் இயக்கம் திமுக. முன்பக்கம் எதிர்த்துவிட்டு, பின்பக்கம் ஆதரிப்பது என்ற இரட்டை நிலை திமுகவுக்கு என்றைக்கும் வந்தது கிடையாது. திமுகவின் வரலாறு தெரியாமல் சீக்ரெட் ஓனர் என்ற கருத்தை தவெக தலைவர் விஜய் சொல்லியுள்ளார். அது விளையாட்டுத் தனமான திமுகவின் வரலாறு புரியாமல் பேசும் தலைவரின் கருத்து என்றுதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications