ரபேல் வாட்ச் பில் கேட்டா! "அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்"னு அளந்துவிடுறது! செந்தில்பாலாஜி கிண்டல்
சென்னை: பாஜகவின் அண்ணாமலை அணிந்துள்ள வாட்ச் குறித்து சில நாட்களாக விவாதம் நடந்து வரும் நிலையில், இது குறித்து செந்தில் பாலாஜி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் குறித்துத் தான் கடந்த சில நாட்களாகவே பரபர விவாதங்கள் நடந்து வருகிறது. முதலில் அண்ணாமலையின் வாட்ச் சில லட்சம் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவவே அதில் இருந்து அத்தனையும் தொடங்கியது.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அண்ணாமலை இடையே இது குறித்துத் தொடர்ந்து தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அண்ணாமலை திமுக தலைவர்களுக்குச் சவால் எல்லாம் விடுத்துள்ளார்.

அண்ணாமலை
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு, இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, "ரபேல் விமானங்கள் இந்திய பாதுகாப்புத் துறையில் முக்கியமானது. அந்த ரபேல் விமான பாகங்களைக் கொண்டு 500 வாட்சுகளை செய்தார்கள். அதில் என்னுடைய வாட்ச் 149ஆவது. ரபேல் விமானத்தில் உள்ள அனைத்து பாகங்களும் இந்த வாட்ச்சில் இருக்கும். இதனால் நான் இந்த வாட்ச்சை வாங்கி கட்டியுள்ளேன். எனது உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் எனது உடலில் இருக்கும். ஏனென்றால் நான் ஒரு தேசியவாதி.. பிரிவினைவாதி இல்லை" என்று அவர் பேசியிருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்தச் சூழலில் ரபேல் வாட்ச் பில்லை வெளியிட முடியுமா என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி முதலில் கேள்வி எழுப்பினார். அதாவது தனது ட்விட்டரில், "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.

அமைச்சர் கேள்வி
அவர் வாங்கின ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசிய வியாதி, மன்னிக்கத் தேசியவாதி, ஆடு வளர்த்துச் சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாகத் தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட முடியுமா?" என்று கேட்டிருந்தார். இதற்கு அண்ணாமலை மிக விரைவில் தனது சொத்து விவரத்தையும் வெளியிட உள்ளதாக அறிவித்தார்.

எப்போது வாங்கியது?
இருப்பினும், அமைச்சர் செந்தில் பாலாஜி, "சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் எனக் கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியைத் தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" எனக் கேட்டிருந்தார்.

சவால்
இதற்கு பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அண்ணாமலை விளக்கமளித்திருந்தார். அதாவது விரைவில் தமிழகம் முழுக்க மக்களைச் சந்திக்கும் வகையில் பாத யாத்திரை செல்ல உள்ளதாகவும் அதில் முதல் நாள், தனது முழு சொத்து விவரத்தை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும், தனது சொத்து விவரம் மட்டுமின்றி, தனது மனைவி மற்றும் தாய்-தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரின் சொத்து விபரத்தையும் வெளியிட உள்ளதாக அறிவித்தார். மேலும், இதேபோல திமுக தலைவர்கள் வெளியிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அளந்துவிட வேண்டாம்
இருப்பினும், இந்த பஞ்சாயத்து ஓய்ந்தாக தெரியவில்லை. சில திமுக நிர்வாகிகளும் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே செந்தில் பாலாஜி தனது ட்விட்டரில், "பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்... மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் 'அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்...கோழி கொக்கரக்கோன்னு...' என்பது போலவே இருக்கிறது" என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த ட்வீட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

திமுக ராஜீவ் காந்தி
முன்னதாக திமுகவின் ராஜீவ் காந்தியும் இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது, "கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட அண்ணாமலை தயங்க காரணம்! வாங்கிய ஆண்டு 2021 இல்லை 2016தாம்! ரசீது ஒரு கர்நாடக காபி கடை முதலாளி பெயரில் உள்ளதாம்! தேர்தல் அபிடவிட்டில் ஏன் சொல்ல? அதையும் தாண்டி ஏன் அந்த நிறுவனம் கர்நாடக சிங்கத்துக்கு (இப்ப ஆடு) லஞ்சம் கொடுத்தது" என்று நேரடியாகவே குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications