குண்டும் குழியுமான சென்னை நேப்பியர் பாலம்.. பைக்கில் சென்ற இளைஞர் பலத்த காயம்.. மருத்துவமனையில் அனுமதி
சென்னை: குண்டும் குழியுமாக உள்ள சென்னை நேப்பியர் பாலத்தின் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலத்த காயம் அடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு சாலைகளில் பள்ளம் அதிகமாக காணப்படுகிறது.. சாலைகளில் உள்ள பள்ளம் காரணமாக விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையில், அதனை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது..ஆனால் நடவடிக்கை என்பதோ ஆமை வேகத்தில் தான் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

ஒரு சாலையில் பள்ளம் ஏற்பட்டால் அதில் யாராவது விபத்தில் சிக்கிய பிறகே நடவடிக்கை என்பது எடுக்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளது. இதனிடைய வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் பேட்ச் ஒர்க் செய்யப்படுகிறது.
சென்னை தங்கசாலை பெருமாள் கோயில் சந்திப்பில் சாலை பேட்ச் ஒர்க் செய்யும் பணி அண்மையில் நடந்துள்ளது. சாலைகளில் பேட்ச் ஒர்க்கிற்காக சிமெண்ட் பேட்ச் போடப்பட்டிருந்தது.. இந்நிலையில் நேற்று காலை உத்தரகண்டைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் (27) இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய அண்மையில் போடப்பட்ட சிமெண்ட பேச்சில் சறுக்கி கீழே விழுந்தார்.
இதனால் பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்தார். பிரவீன் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் விபத்தில் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் சாலை பணிகள் முடிக்கப்பட்டிந்தால் அவர் இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே சென்னையில் சாலை சரியில்லாத காரணத்தால் இன்னொரு விபத்து இன்று நடந்துள்ளது. இந்த விபத்து சென்னை காமராஜர் சாலையில் நடந்துள்ளது. தலைமை செயலகத்திற்கு இங்கிருந்து மிக பக்கம் ஆகும். இந்த சாலை என்பது அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நீதிபதிகள் என பலரும் போகும் முக்கியமான சாலை ஆகும். இந்நிலையில் காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தின் சாலை சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது.
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் போது, நேப்பியர் பாலத்தின் சாலையில் சதுரங்க வடிவிலான வர்ணம் பூசப்பட்டது. இதனால், அங்குள்ள பள்ளங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேப்பியர் பால சாலை தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சென்னை நேப்பியர் பால சாலையை இனியாவது உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications