ஆட்டிடியூட் காட்டிய ஆர்த்தி! தீராத காதலில் ஜெயம் ரவி! சுவர் எகிறி குதித்து ரொமான்ஸ் செய்த தருணம்
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் எப்படியெல்லாம் காதலித்தனர் என்பது குறித்த பிளாஷ்பேக்குகள் இணையத்தில் உலா வருகின்றன.
இன்று ஜெயம் ரவி பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நேற்றைய தினம் ரசிகர்களுக்கும் அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டிருந்தார். அதாவது கடந்த சில மாதங்களாக புகைந்து வந்த இந்த விவகாரம் நேற்று கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

அதாவது ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார். ஜெயம் ரவி 1989 ஆம் ஆண்டு ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். இதையடுத்து அவர் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் மேற்கத்திய நடனம், பரத நாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளை கற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து 2003 ஆம் ஆண்டு தனது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் ஜெயம் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக ஜெயம் ரவி வலம் வருகிறார். இந்த நிலையில் ஜெயம் ரவி- ஆர்த்தியை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆரவ், ஆர்யன் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆர்த்தியை ஜெயம் ரவி முதலில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்ததுமே பிடித்துவிட்டது. இதையடுத்து அவரை தேடி கண்டுபிடித்து தனது காதலையும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். ஆர்த்தி பணக்காரர், ஆனால் ஜெயம் ரவி நடுத்தர குடும்பத்திலிருந்து உயர்ந்தவர். அதாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பத்தை சேர்ந்தவர் ரவி.
ஆர்த்தி, கொஞ்சம் ஆட்டிடியூட் காட்டும் பெண்ணாக இருந்த போதிலும் ஜெயம் ரவிக்கு, அவர் மீதான தீராத காதல், அதையெல்லாம் மறைத்துவிட்டது. ஆர்த்தியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டு சுவற்றை எல்லாம் ஏறி குதித்து ஜெயம் ரவி பார்த்துள்ளாராம். இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அது போல் ஜெயம் ரவி பிரபலம் என்பதால், ஆர்த்தியை காதலிக்கும் விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக ஹோட்டலுக்கு கூட செல்லாமல் காரிலேயே காதலித்தார்களாம். அதாவது காரில் கூட லாங் டிரைவ் போக முடியாமல் பல யூடர்ன் போட்டு காதலித்த நினைவுகளை மறக்கவே முடியாது என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
இப்படி உருகி உருகி காதலித்த இவர்களது வாழ்வில் தற்போது புயல் வீசத் தொடங்கிவிட்டது. இதுகுறித்து ஜெயம் ரவி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.
எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே., நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications