நடிகர் வடிவேல் சொன்ன ஒரு வார்த்தை! மதுப்பழக்கத்தை விட்ட முத்துக்காளை.. இப்போ எது மீது போதை தெரியுமா?
சென்னை: காமெடி நடிகர் முத்துக்காளை மதுக்குடிப்பதை விட்டு 6 ஆண்டுகள் ஆகிறதாம். இதற்கு காரணம் நடிகர் வடிவேல் சொன்ன ஒரு வார்த்தை என்கிறார்.
மதுரை மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் முத்துக்காளை. இவர் தனது 18 வயதில் கராத்தே பயிற்சியில் பிளாக் பெல்ட் வாங்கியவர். இவர் சினிமாவில் சண்டை பயிற்சியாளர் பணிக்கு சேர்ந்தார். அதுதான் அவருடைய முதல் சினிமா அனுபவம்.

அதன் பிறகு அவருக்கு வடிவேலுவுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. இதையடுத்து காமெடியனாக வடிவேலுவுடன் சேர்ந்து நடித்து வந்தார். செத்து செத்து விளையாடலாம் வா, அண்ணே அவன்கிட்ட வாங்குன காசுக்கு ஏணி சின்னத்துல ஒரு குத்து.. உன்கிட்ட வாங்குன காசுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து, ஆக மொத்தம் 2 குத்து என காமெடியில் கலக்கியிருப்பார்.
வடிவேலு சினிமாவில் நடிக்காமல் இருந்ததால் இவர்களை போன்ற துணை நடிகர்களின் வாழ்வு கேள்விக்குறியானது. அதிலும் சில துணை நடிகர்கள் குடியால் சீரழிந்தனர். அப்படி தன் வாழ்க்கையை சீரழித்தவர்களில் முத்துக்காளையும் ஒருவர். ஆனால் இப்போது அவர் குடியை விட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன. அவர் எப்படி குடியை விட்டார் என்பதை பார்ப்போம்.
ஒரு முறை ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்துள்ளார் முத்துக்காளை. அப்போது வடிவேலு, முத்துக்காளை லேட்டாக வந்ததால் கோபமடைந்து தடாலடியாக ஒரு கருத்தை தெரிவித்தாராம். அதாவது எழுதி வச்சிக்கோங்க! குடியால் முதல்ல அல்வா வாசு சாவான், அடுத்த வருஷம் முத்துக்காளை செத்துடுவான் என்றாராம்.

அதே போல் அதே ஆண்டு அல்வா வாசு இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்காளை எப்படியாவது குடியை விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். இதற்காக இரு முறை முயற்சித்தும் தோல்வி அடைந்தாராம். உடனே மது பழக்கத்திலிருந்து விடுபடும் மையத்திற்கு சென்றாராம். அங்கு அவர் பல்வேறு பயிற்சிகளுக்கு பிறகு குடியை விட்டுவிட்டார்.
தற்போது 6 ஆண்டுகளாக முத்துக்காளை பாட்டிலை தொட்டதே இல்லையாம். முத்துக்காளை குடிப்பழக்கத்தை மறக்க வேறு ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது தொலைதூர கல்வியில் பிஏ வரலாறு படித்துள்ளார். பின்னர் எம்.ஏ. தமிழ் படித்துள்ளார். தற்போது முத்துக்காளை பிஎட் படித்து வருகிறாராம்.












Click it and Unblock the Notifications