சென்னை வரலாற்றில் முதல் பெரிய மாற்றம்.. மினி பஸ்கள் ரூட்கள் எப்படி இருக்க போகுது தெரியுமா?
சென்னை: பல ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் மினி பஸ்கள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் சென்னையில் மினி பஸ் ரூட்கள் எப்படி இருக்க போகிறது? எந்த எந்த வழித்தடத்தில் மினி பஸ்கள் ஓடப்போகிறது, சென்னையில் எங்கெல்லாம் மினி பஸ் வராது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 1997ம் ஆண்டு மினி பஸ் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் பேருந்து வசதிகள் கிடைத்தன. நினைத்த உடன் நகர்பகுதிக்கு மக்கள் செல்ல வசதிகள் கிடைத்தன. இந்த மினி பஸ் சேவைகள் தான் கிராமங்களில் பலர் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி பெற காரணமாக அமைந்தன.

நல்ல போக்குவரத்து வசதி உள்ள எந்த நகரமும் கிராமமும் நல்ல வளர்ச்சி பெறும் என்பது இயற்கை. அந்த வகையில் இருசக்கர வாகனங்களே பல வீடு இல்லாத காலக்கட்டத்தில் வந்த மினி பஸ் சேவைகள் இன்று பலரது வீடுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பேருந்துகளே பலவருடங்களாக செல்லாத கிராமங்கள் இன்று பேருந்து சேவையை அனுபவித்து வருகின்றன.
அதேநேரம் மினி பஸ் சேவைகள் கடந்த பல ஆண்டுகளாக எந்த ஊருக்கும் வழங்கப்படவில்லை.. ஏன் புதிய ரூட்டில் பேருந்து வழித்தடங்களும் யாருக்குமே வழங்கப்படவில்லை. இப்போது ஓடும் அத்தனை பேருந்து பெர்மிட்டுகளும் என்றோ வழங்கப்படவை தான். அரசு பேருந்துகளுக்கு மட்டுமே புதிதாக பெர்மிட் மற்றும் ரூட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம் சென்னை நகருக்குள் மட்டுமே மினி பஸ் சேவைகளுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் மாநகர பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களை குறிவைத்து மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சாலை போக்குவரத்தில் மாற்றியமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, புதிய மினி பஸ் திட்டம் வரைவு அறிக்கை -2024 தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயக்குவதற்கு அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
அரசின் இந்த வரைவு அறிக்கையில் சென்னையில் மினி பஸ் ரூட்கள் எப்படி இருக்க போகிறது? எந்த எந்த வழித்தடத்தில் மினி பஸ்கள் ஓடப்போகிறது, சென்னையில் எங்கெல்லாம் மினி பஸ் வராது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இந்த மினி பஸ் சேவை வழித்தடம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் சென்னை மாநகராட்சியுடன் 2011-ம் ஆண்டு இணைந்த பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் எந்ததெந்த வழித்தடங்களில் மினி பஸ்களுக்கான அனுமதியை வழங்கலாம் என்பதனை போக்குவரத்து துறையின் ஆர்.டி.ஓ.க்கள் முடிவு செய்வார்கள் என்றும் அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வரைவு அறிக்கை குறித்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 22-ந் தேதி சென்னை கோட்டை 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications