காலம் எவ்வளவு வேகமாக சுழலுது பார்த்தீங்களா? அன்று கரு நாகராஜன்.. இன்று சரத்குமார்!
சென்னை: சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து கரு நாகராஜனை நீக்கிய சரத்குமார் இன்று அதே நாகராஜன் மாநில துணைத் தலைவராக உள்ள பாஜகவில் சாதாரண உறுப்பினராக இணைந்துள்ளார். இதுதான் காலம் எவ்வளவு வேகமா சுழலுது என்பதற்கு உதாரணமாகும்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடந்த 2016ஆம் ஆண்டு அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கரு நாகராஜனை கட்சியிலிருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து கரு நாகராஜனும் பாஜகவில் இணைந்து இன்று பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கிறார்.

பாஜகவில் தேசிய தலைவராக இருந்த அமித்ஷாவை சந்தித்து ஆசி பெற்று மத்திய இணையமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கரு நாகராஜன் இணைந்தார். அது போல் அவருடன் அவருடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்தனர்.
அப்போது கரு நாகராஜன் கூறியதாவது: நாங்கள் 9 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்து பாடுபட்டோம். சரத்குமார் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருக்கிறார். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில்லை, இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் இல்லை. பெரும்பான்மை மக்களின் குறைகளுக்கு தீர்வு காண வழி இல்லாத நிலையில்தான் இருந்து கொண்டிருந்தோம்.
எனவே நாங்கள் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டோம். இவ்வாறு தெரிவித்திருந்திருந்தார். இதையடுத்து சாதாரண தொண்டராக வந்த கரு நாகராஜன் இன்று பாஜக மாநில துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். அவரும் அக்கட்சியில் இருந்தவர்களும் பாஜகவில் இணைந்துவிட்டனர். அண்ணாமலை தலைமையில் இதெல்லாம் நடந்தது. சரத்குமாருக்கு விரைவில் ஏதாவது ஒரு பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது. இல்லாவிட்டால் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நேற்று முன் தினம் வரை பாஜகவுடன் கூட்டணி பேசி வந்த சரத்குமார் இன்று மொத்தமாக கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்ததைவிட ஒரு ஆச்சரியம் இருக்கிறது தெரியுமா. அதாவது அன்று கரு நாகராஜனை சரத்குமார் கட்சியை விட்டே நீக்கிவிட்டார். ஆனால் இன்று அதே கரு நாகராஜன் மாநில துணைத் தலைவராக உள்ள ஒரு கட்சியில் சரத்குமார் சாதாரண தொண்டனாக இணைந்துள்ளார்.
இதுதான் காலம் எவ்வளவு வேகமாக சுத்துது என்பதற்கான உதாரணம். சூர்யவம்சம் படத்தில் ஆட்சியரான தேவயானியை பிரியா ராமன் சந்திப்பார். அப்போது சரத்குமார் படிக்கவில்லை என்பதற்காக அவரை திருமணம் செய்ய பிரியா ராமன் மறுத்துவிடுவார். அதை குத்திக் காட்டிய தேவயானி "காலம் எவ்வளவு வேகமா சுழலுது பார்த்தீர்களா? அன்று அவர் படிக்கவில்லை என உதாசினப்படுத்தினீங்க, இன்று படித்த உங்க கணவருக்காக வேலை கேட்டு வந்திருக்கீங்களே என்பார். தற்போது அதே நிலைதான் சரத்குமாருக்கும்!












Click it and Unblock the Notifications