அதிமுக பொது குழுவில் அல்வா: வெஜ் பிரியாணி, சாம்பார், ரசம், மோர்! லஞ்ச் மெனுவில் அசைவம் இல்லாதது ஏன்?
சென்னை: சென்னை வானகரத்தில் நடந்து வரும் அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டத்தில் மதிய உணவுக்கான பட்டியல் என்ன தெரியுமா?
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுகவின் பொதுக் குழு, செயற்குழு கூட்டம் இன்று வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

அதிமுக- பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு நடத்தப்படும் முதல் பொதுக் குழு கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தன. முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவருமான ஓபிஎஸ்ஸால் தற்போது அதிமுக கொடியையும் லெட்டர் பேடையும் கரை வைத்த வேட்டியையும் கட்ட முடியாதபடி கோர்ட்டுக்கு போய் வென்றனர் எடப்பாடி தரப்பினர்.
இந்த நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகும். அதன்படி இன்றைய தினம் பொதுக் குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடந்தது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை திமுக அரசை கண்டித்து இருந்தன. கட்சி கூட்டம் என்றாலே விருந்துதான் பிரதானம். அந்த வகையில் காலை உணவை அதகளப்படுத்திவிட்டனர்.
காலையில் பொங்கல், இட்லி, வடை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. காலை, மதியம் இருவேளையும் 5000 பேருக்கு உணவு சமைக்கப்படுகிறது. இதற்கான செலவை அதிமுகவே ஏற்றுக் கொண்டது. அது போல் மதிய உணவாக என்னென்ன தயாரிக்கப்பட்டுள்ளது தெரியுமா
தம்ரூட் அல்வா
வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
வடை
புடலங்காய் கூட்டு
கோஸ் பொரியல்
உருளை கிழங்கு பொரியல்
வெண்டைக்காய் மொச்சை கொட்டை போட்டு மண்டி
வற்ற குழம்பு
முருங்கைக்காய், கத்திரிக்காய் போட்டு சாம்பார்
ரசம்
தயிர், மோர், ஊறுகாய்
அப்பளம், பருப்பு சாதம், நெய்
அடை பிரதமன் பாயாசம்
வாழைப்பழம்
ஐஸ்கிரீம், ஜூஸ்,
பீடா
தண்ணீர் பாட்டில்
உள்ளிட்டவை மதிய உணவாக வழங்கப்படுகிறது. அது போல் இன்று பௌர்ணமி தினம் என்பதால் சைவ உணவே வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மண்டபத்தில் அசைவம் சமைக்கவும் அசைவம் பரிமாறவும் அனுமதி இல்லை. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது எடப்பாடி பொதுச் செயலாளராக பதவியேற்றதும் நடத்தப்பட்ட மதுரை மாநாட்டிற்கு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு செய்யப்பட்ட புளி சாதம் பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. புளி சாதம் குழைந்து வெந்து உப்பு, புளி, காரம் இல்லாமல் சப்புனு கிடந்ததாக பலர் அந்த உணவை சாப்பிடவில்லை.
இதனால் அண்டா அண்டாவாக செய்யப்பட்ட புளி சாதம் வீணாகிவிட்டது. இதனால் சூடாக பரிமாறிய சாம்பார் சாதத்தையே தொண்டர்கள் விரும்பி சாப்பிட்டனர். கடும் பசியில் இருந்த தொண்டர்களுக்கு மதுரை மாநாட்டு உணவு என்பது பெரும் அதிருப்தியாகவே இருந்தது. கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இனி இந்த உணவு விவகாரம் சரியாக கவனிக்கப்படும் என முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி உதயக்குமார் போன்றோர் கூறியிருந்தனர். அந்த வகையில் இன்று பொதுக் குழு கூட்டத்திற்கான உணவை பார்த்து பார்த்து தயாரித்தனராம்.
பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த உணவு தயாரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனராம். இந்த முறை வந்தவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு மனம் குளிர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் கட்சி மேலிடம்.












Click it and Unblock the Notifications