பெருங்களத்தூர் பெண்.. ரயில் வருதுமா.. காதில் மாட்டியிருந்த ஹெட்போன்.. இறுதிவரை கேட்காமல் போன சத்தம்
சென்னை: ரயில் வருதுமா, ரயில் வருமா என்று மக்கள் கத்தியும் எந்த சத்தமும் கேட்கவில்லை.. செல்போனில் ஹெட்போனை மாட்டியபடி ரயில் தண்டாவளத்தில் பாட்டு கேட்டபடி தண்டவாளத்தை கடந்த பெண், சென்னை பெருங்களத்தூரில் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பலர் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, பாட்டுக்கேட்டுக்கொண்டே சாலையில் நடந்து செல்கிறார்கள். ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கிறார்கள். இதன் காரணமாக பின்னால் வரும் வாகனங்களின் சத்தமோ அல்லது ரயிலின் சத்தமோ கேட்காமல் போகிறது. இதேபோல் மக்கள் அலார்ட் செய்யும் போது அவர்களின் சத்தமும் கேட்பது இல்லை. இறுதியில் எந்த சத்தமும் கேட்காமல் உயிரையே விடுகிறார்கள். அப்படித்தான் ஒருசம்பவம் சென்னை பெருங்களத்தூரில் நடந்துள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் வசித்து வந்த 26 வயதாகும் தாரணி சத்யா கம்ப்யூட்டர் என்ஜினீயர் படித்து முடித்தவர் ஆவார். இவரது சொந்த ஊர் ஆந்திரம் மாநிலம் ஆகும். இவர் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை சாப்ட்வேர் என்ஜினியர் தாரணி சத்யா, வேலைக்கு செல்வதற்காக பெருங்களத்தூர் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அந்தநேரம் பார்த்து செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தாரணி சத்யா, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஐடி ஊழியரான தாரணி சத்யா, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்டபடியே வந்தாராம். இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். ரயில் வருவதாக அங்கிருந்தவர்கள் எச்சரித்தனர். மேலும் ஹாரனும் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் காதில் ஹெட்போன் மாட்டி இருந்ததால் அவர்களின் குரலும் சரி, ரயிலின் சத்தமும் சரி தாரணி சத்யாவுக்கு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இறுதியில் எந்த சத்தமும் கேட்காமல் உயிரையே விட்டுள்ளார் தாரணி சத்யா.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பலியான தாரணி சத்யா உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காதில் ஹெட்போன் போட்டுக்கொண்டு சாலையை கடப்பதோ, ரயில் தண்டவாளத்தை கடப்பதோ கூடவே கூடாது என்று பலமுறை அறிவுறுதத்தல்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி விபத்துக்கள் நடப்பது துரதிஷ்டவசமாகும்.












Click it and Unblock the Notifications