அதிமுக பொதுக்குழு வழக்கு என்றால் என்ன, எதற்காக தொடரப்பட்டது ?
திமுக பொதுக் குழு வழக்கு என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.
சென்னை: அதிமுக பொதுக் குழு வழக்கு என்றால் என்ன, அந்த வழக்கு எதற்காக தொடரப்பட்டது?
கடந்த 7 அல்லது 8 மாதங்களாக நாம் செய்தித் தாள்களிலும் , ஊடகங்களிலும் அடிக்கடி கேட்கப்படும் வார்த்தை அதிமுக பொதுக் குழு வழக்கு. இந்த வழக்குதான் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரின் அரசியல் அத்தியாயத்திற்கு திருப்புமுனையாக அமையவிருக்கிறது.
அது அரசியலிலும் சற்று தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. முதலில் அதிமுக பொதுக் குழு வழக்கு என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னர் அது கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
ஜூன் 14, 2022- அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சை அதிமுக மூத்த நிர்வாகிகள் எடுத்தனர். இதற்கு ஓபிஎஸ் தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. அன்று முதல் அதிமுகவில் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம்.

அதிமுக பொதுக் குழு நடக்குமா நடக்காதா என்றெல்லாம் யூகங்கள் கிளப்பின. அதிமுக பொதுக் குழு தொடர்பான ஆலோசனைகளில் ஓபிஎஸ்ஸை அழைக்காமல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவில் வைத்து எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதாக ஒரு தகவல் கிடைத்தவுடன் ஜூன் 22 ஆம்தேதி ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினார். விடிய விடிய நடந்த இந்த வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் ஒப்புதல் அளித்த கையொப்பமிட்ட தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஜூன் 23, 2022- தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ் உற்சாகமாக அதிமுக பொதுக் குழு நடந்த வானகரம் திருமண மண்டபத்திற்கு வருகை தந்தார். அங்கு அவரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் விரட்டி அடிக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் தனி அறையில் அமர வைக்கப்பட்டார். இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டதால் அவர் தாமதமாகவே பொதுக்குழுவுக்கு வந்தார்.
எடப்பாடி பழனிசாமி வந்ததும் ஓபிஎஸ் மேடைக்கு வந்தார். அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ்ஸை துரோகி என்று கடுஞ்சொற்களால் வசைப்பாடினர். இதையடுத்து 23 தீர்மானங்களை முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. அப்போது ஆவேசமாக வந்த சிவி சண்முகம் இந்த 23 தீர்மானங்களும் பொதுக் குழுவால் ரத்து செய்யப்படுகிறது என மூன்று முறை அறிவித்தார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பால் தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை வைத்து ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக் குழு என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் பொதுக் குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு ஓபிஎஸ் பாதியிலேயே வெளியேறினார். அவர் மீண்டும் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டு, அவர் வந்த வாகனத்தின் டயரும் பஞ்சராக்கப்பட்டது.
ஜூலை 11 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் நடத்த தடை விதிக்கக் கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். இதே போல் விசாரணை நடத்தப்பட்டு ஜூலை 11 ஆம் தேதி ஓபிஎஸ் வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. அதில் அதிமுக சட்டவிதிகளுக்குள்பட்டு பொதுக் குழுவை நடத்திக் கொள்ளலாம் என இரு அமர்வு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் தொடங்கியது. ஆனால் அங்கு ஓபிஎஸ் செல்லவில்லை. அதற்கு மாறாக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றார். அங்கு அவர் வருவதை அறிந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மோதல் போக்கில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்த எடப்பாடி, ஓபிஎஸ் பேனர்களை மாறி மாறி கிழித்துக் கொண்டனர். அலுவலகத்தில் நாற்காலிகள் வீசப்பட்டு போர்க்களம் போல் இருந்தது. இரு தரப்பு ஆதரவாளர்களும் காயமடைந்தனர்.
ஜூலை 11 இல் நடந்த பொதுக் குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார், அது போல் அதே கூட்டத்தில் ஓபிஎஸ் பொருளாளர் பதவி உள்பட அதிமுகவிலிருந்தே நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை பொதுக் குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார்.

இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு செல்லும் என்ற இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பொதுக் குழு என்றால் என்ன, இபிஎஸ், ஓபிஎஸ் என்றால் என்ன, அவைத் தலைவர் என்றால் என்ன, பொதுக் குழுவுக்கான அதிகாரங்கள் என்ன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிகழ்ச்சி நிரலில் இல்லாத போது ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கடந்த ஜனவரி மாதம் 5 நாட்கள் நடந்த இந்த பொதுக் குழு தொடர்பான விசாரணையின் முடிவில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு போட்டியாக ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை அறிவித்ததால் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
அதில் அவைத் தலைவர் சார்பில் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் தான் அறிவித்த வேட்பாளரை வாபஸ் பெற வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளருக்கு ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இன்றைய தினம் பொதுக் குழு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடருவாரா இல்லை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தொடருவாரா என்பதும் அதிமுக மீது யாருக்கு உரிமை என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications