தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வர்றீங்களா.. இப்படி வந்தால் தாம்பரம் வரை வரலாம்.. குட்நியூஸ்
சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் இந்த ஒரு கோட்ட அரசு பஸ்கள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த கோட்ட பேருந்துகள் என்பதை பார்ப்போம்.
கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், சென்னை வாழ் மக்கள் கிளாம்பாக்கம் போய் தான் பேருந்தில் ஏறி சொந்த ஊர் போக முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் சென்னைக்குள் வந்து காலையில் இறங்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை தென் மாவட்ட பேருந்துகள், சேலம், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்ட பேருந்துகள், மத்திய மாவட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்னதாக பேருந்துகள் எல்லாம் ஜிஎஸ்டி சாலையில் இறக்கிவிட்டு சென்ற நிலையில், எந்த பேருந்தையும் கிளாம்பாக்கம் எதிரே நிறுத்த காவல்துறையினர் இன்று முதல் அனுமதிக்கவில்லை.
ஊரப்பாக்கம் சிக்னலில் இருந்து வண்டலூர் பாலம் வரை எங்கும் அனுமதிக்காமல் நேரடியாக பேருந்து நிலையத்திற்குள் சென்று இறக்கிட வைக்கிறார்கள் காவல்துறையினர். இதனால் ஜிஎஸ்டி சாலையில் இன்று எங்குமே வாகன நெரிசல் ஏற்படவில்லை.. அதேநேரம் கிளாம்பாக்கம் டவுன் பஸ்கள் விரைவு பேருந்து நிலையத்தின் முகப்பில் வைத்து ஏற்றி செல்கின்றன.. தனியாக அங்கிருந்து டவுன் பஸ் ஸ்டாண்டிற்கு போக வேண்டிய அவசியம் பயணிகளுக்கு ஏற்படவில்லை.
தற்போதைய நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நகரத்திற்குள் வருவதற்கு, மக்கள் தாம்பரம் வந்து மின்சார ரயில் அல்லது மாநகர பஸ்களை பிடித்து செல்ல வேண்டும். இல்லையெனில் பொத்தேரி ரெயில் நிலையம் அருகே இறங்கி மின்சார ரெயில்களை பிடித்து வர வேண்டும் என்கிற நிலையே உள்ளது.. இதனால் பலரும் பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி ரயிலில் ஏறி தங்கள் வீடுகளுக்கு செல்கிறார்கள். கிளாம்பாக்கம் வருவோர் ரயிலில் செல்ல தொடர்ந்து சிரமமமான நிலையே நீடிக்கிறது.
இந்த சிரமங்களை தவிர்ப்பதற்காக விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் போது தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சென்றடைகிறது. அதன்பின்னர் அந்த பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மேற்குறிப்பட்ட பஸ்கள் இயக்கத்திற்கு ஏற்றவாறு தங்கள் பயணத்தினை அமைத்துக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications