"16 வயதினிலே".. டபுள் ரோல் பாஜக.. திமுக சாமி கும்பிட்டாலும், கும்பிடா விட்டாலும் தப்பு: வே. மதிமாறன்
அண்ணாமலை மற்றும் பாஜகவை சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார் வே மதிமாறன்
சென்னை: அண்ணாமலை Vs உதயநிதி என்று இவர்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள்.. உதயநிதிக்கு வேற வேலை இல்லையா.. உதயநிதிக்கு அண்ணாமலை எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்று வே.மதிமாறன் நறுக்கென சொல்லி உள்ளார்.
திமுக ஆதரவான கருத்துக்களை, இளைஞர்களிடம் விடாமல் கொண்டு சென்று வருபவர் வே.மதிமாறன்.. மிகச்சிறந்த எழுத்தாளர்.. எழுத்தாளரும், உடும்பு பிடிமிக்க பெரியாரிஸ்ட்..
"ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு டார்கெட் இஸ்லாமியர்கள் கிடையாது, திமுகதான்.. இங்கு திமுகவை வீழ்த்திவிட்டால் எல்லாவற்றையும் வீழ்த்திவிடலாம்.. எனவே, இது விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது" என்பதை ஓங்கி உரைத்து வருபவர் மதிமாறன்.
வே.மதிமாறன்
"தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஆர்எஸ்எஸ் போராடியதே கிடையாது, இடஒதுக்கீடு கூடாது என்று சொன்னவர்கள் ஆர்எஸ்எஸ்தான்.. பார்ப்பனர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, கட்டமைத்ததும் ஆர்எஸ்எஸ்தான்.. மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீடு கூடாது என்று சொன்னதும் ஆர்எஸ்எஸ்தான்.. அப்படியானால், தமிழகத்தின் சமூக நீதி மண்ணில் எதுக்காக ஊர்வலம் செய்ய வருகிறார்கள்? என்று அதிர கேட்டவர் வே.மதிமாறன். 4 நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றபோது, மதிமாறன் ஒரு ட்வீட் போட்டிருந்தார்..
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
அதில் "நான்கே மாதத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களிடம் 2000 ஆண்டுகாலத் திராவிடத் தத்துவ வரலாறு-100 ஆண்டுகாலத் திராவிட இயக்க வரலாறையும் கொண்டு சேர்த்த மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, 'திராவிடப் பண்பாட்டுத் துறை'உருவாக்கி அதற்கும் அவரை அமைச்சராக்க வேண்டும்.. மகிழ்ச்சி வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார்.. மதிமாறனின் இந்த ட்வீட், பல தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது.
அனல் களம்
இந்நிலையில், நம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக, வே.மதிமாறனை சந்தித்து பேசினோம்.. "எங்களிடம் படித்த ஐபிஎஸ் படித்த ஒருவர் தலைவராக வந்துள்ளார் என்று பாஜக சொல்கிறது.. மேலும், அண்ணாமலை Vs உதயநிதி என்றுதான் அரசியல் களம் இருக்க போகிறது என்கிறார்கள்.. இது எந்த அளவுக்கு உண்மை? என்ற கேள்வியையும் முன்வைத்தோம். அதற்கு நம்மிடம் வே.மதிமாறன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:
காமெடி பீஸ்கள்
"தமிழக முதல்வரை ஏதாவது சீண்டி, அண்ணாமலை பேசி கொண்டேதான் இருக்கிறார்.. ஆனால், என்றைக்காவது அண்ணாமலை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறாரா? அண்ணாமலையை எல்லாம் உதயநிதி ஒரு பொருட்டாகவே மதித்தது கிடையாது.. திமுகவுக்கு டார்கெட் பாஜக கிடையாது.. அதிமுக மட்டுமே திமுகவுக்கு டார்கெட்.. லோக்கலில் இருக்கும் காமெடி பீஸ்களை பற்றி, திமுகவின் தலைவர்கள் எப்போதுமே பேசுவது கிடையாது.. அண்ணாமலை Vs உதயநிதி என்று இவர்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள்..
எடப்பாடி Vs எடப்பாடி
ஆனால், உதயநிதி Vs மோடி, உதயநிதி Vs எடப்பாடி, உதயநிதி Vs ஓபிஎஸ்.. இப்படிதான் இன்றைய அரசியல் போகிறதே தவிர, உதயநிதி Vs அண்ணாமலை என்று போகவில்லை. உதயநிதிக்கு வேற வேலை இல்லையா? இப்படி ஒரு விஷயத்தை இவர்களாகவே சொல்லி கொள்கிறார்கள்.. 16 வயதினிலே படத்தில் மயில்கிட்ட சப்பாணி சொல்வது போலத்தான், "சப்பாணின்னுதான் கூப்பிடறானுங்க.. கோபாலகிருஷ்ணன்னு எவன் கூப்பிடறான்.. நானே சொல்லிவிட்டு திரிய வேண்டியதுதான்" என்பது போலத்தான்.. உதயநிதி Vs அண்ணாமலை என்ற பிம்பத்தை இவர்களாகவே கட்டமைத்து கொள்கிறார்கள்.. அதுவும் சோஷியல் மீடியாவில் மட்டுமே இப்படி நடந்து வருகிறது..
கெட்ட கெட்ட வார்த்தை
உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்போகிறார்கள் என்று சொன்னது முதல் இப்போதுவரை ஒவ்வொரு ஃபேக் ஐடியிலும், அசிங்க அசிங்கமான கமெண்ட்களை பதிவிடுகிறார்கள்.. திமுக எதிர்ப்பை கட்டமைப்பதற்கு இவர்களே அம்பலமாக இருப்பார்கள்.. திமுக மீது வீசப்படும் காழ்ப்புணர்ச்சிகள், கெட்ட வார்த்தைகள், இதெல்லாம் திமுகவுக்குதான் பிளஸ் ஆக சென்று கொண்டிருக்கிறது.. மக்கள் மத்தியில் இவர்களை பற்றின காழ்ப்புணர்ச்சி கண்ணேட்டம்தான் உருவாகும்.. உதயநிதிக்கு பதவி தருவது என்பது, பாஜக, மத்திய ஆட்சி நடத்துவதைவிட மோசமான விஷயமா என்ன?
யோக்கியதை
அதனால், திமுகவை விமர்சிப்பவர்களின் யோக்கியதை என்ன என்பது மக்களுக்கு தெரியும்.. அவர்களின் கெட்ட வார்த்தைகளையும், அசிங்கமான விமர்சனங்களையும் மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அன்று ஆட்சியில் இருந்தபோது, அதிமுகவுக்கு பாஜக பின்புலத்தில் இருந்தது.. அதுபோல, இன்று தமிழக பாஜகவுக்கு பின்னணியில் அதிமுக இருக்கிறது.. அதனால்தான், அதிமுக எந்த போராட்டத்தையும் இப்போது நடத்துவதில்லை.. இந்தி திணிப்பு அமித்ஷாவால் பேசப்பட்டதே.. இந்தி படித்தே ஆக வேண்டும் என்று அமிர்தஷா சொன்னாரே, அதற்கு அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
அடிஆள்
பாஜக எந்த கூட்டம் நடத்தினாலும், அதற்கு அதிமுக ஆட்களை திரட்டி அனுப்புவது போன்ற எடுபிடி வேலையை அதிமுக பார்த்து வருகிறது. பாஜகவுக்கு பின்னால் இருந்து திமுகவை எப்படியாக கவிழ்க்க துடித்து கொண்டிருக்கிறது அதிமுக.. உதயநிதியை துணை முதல்வர் பதவி கூட தருவார்கள் என்கிறார்கள்.. உதயநிதி முதல்வரே ஆனால் இவங்களுக்கு என்ன? உதயநிதி கவர்னரே ஆனால் இவங்களுக்கு என்ன? இன்னொரு கட்சி விவகாரத்தில் எது நடந்தாலும் இவர்களுக்கென்ன?
கண்ணோட்டம்
முதல்வரை, இந்து மத விரோதி என்பார்கள், அவரது துணைவியார் கோயிலுக்கு போனால், இதுதான் பெரியார் கண்ணோட்டமா? என்று கேட்பார்கள்.. கும்பிட்டாலும் தப்பு, கும்பிடாவிட்டாலும் தப்பு என்றால் எப்படி? இரண்டுமே இவர்கள்தான் சொல்கிறார்கள்.. இது என்ன நியாயம்? இந்துவிரோதி என்றும் சொல்லிவிட்டு, பகுத்தறிவு பல்லிளிக்கிறது என்றும் இரண்டு விதமான ரோல்களை செய்து வருகிறார்கள்.. இது எந்த அளவுக்கு போலித்தனமாமோ, அதுபோலத்தான், உதயநிதி விஷயத்திலும் அவர்கள் சீண்டி வருவது.. இதுக்கெல்லாம் காரணம், திமுகவுக்கு எதிராக பேசுவதற்கு அவர்களுக்கு எந்த விஷயமும் கிடைக்கவில்லை. அதான்" என்றார்.