10 வருட முயற்சி.. நிறைவேறாமல் போன விஜயகாந்தின் கடைசி ஆசை
சென்னை: நடிகர் மாரிமுத்து புது வீடு கட்டிய நிலையில், அதில் குடியேறாமல் மறைந்தார். அதேபோல் பூந்தமல்லி அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டில் குடியேறாமலேயே நடிகர் விஜயகாந்த் காலமானார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு முதல் விஜயகாந்த் வீடு ஒன்றை கட்டி வருகிறார். சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் இந்த வீட்டின் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொய்வடைந்த நிலையில் மீண்டும் பணிகள் வேகம் எடுத்தன. 90 சதவீத பணிகள் முடிவடைந்தது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டதாகவும், இவ்விழாவில் விஜயகாந்த் பங்கேற்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால கடந்த 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த வீட்டில் விஜயகாந்த் வசிக்க வேண்டும் என தீவிர முயற்சி செய்த நிலையில் அந்த ஆசை நிறைவேறாமலேயே போனது. இருப்பினும் இந்த வீட்டின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக எதிர் நீச்சல் சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு போன நடிகர் மாரிமுத்துவும் ஆசை ஆசையாக வீடு கட்டி வந்தார். அந்த வீட்டில் குடியேறும் முன்பு அவர் மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார். அதேபோல் தான் புதிய வீட்டில் குடியேறும் முன்பே விஜயகாந்த் இறந்து போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிகிச்சை பெற்றபடி வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். விஜயகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது. வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த டிசம்பர் 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார் .
கடந்த செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் மருத்தவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (டிச.28) காலை விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் இன்று காலை 6 மணி அளவில் உயிரிழந்தார். விஜயகாந்த் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications