பிரிட்ஜில் மாத்திரைகளை வைக்கிறீர்களா? மருந்தின் வீரியம் குறையுமா? நிபுணர்கள் விளக்கும் உண்மை
சென்னை: பிரிட்ஜ் (Refrigerator) என்பது வீடுகளில் இன்றைக்கு அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சமைத்த உணவுகள், காய்கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க பிரிட்ஜை பயன்படுத்துவது ஒருபுறமிருக்க, பெரும்பாலான வீடுகளில் இன்னொரு வழக்கமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது மெடிக்கல் ஷாப்பில் இருந்து வாங்கி வரும் மாத்திரைகள், சிரப்களை பிரிட்ஜிற்குள் வைத்து விடுகிறார்கள். ஆனால் அப்படி பிரிட்ஜில் மருந்து பொருட்களை வைக்கலாமா? அப்படி வைத்தால் மருந்துகள் கெட்டுப்போகாமல் இருக்குமா? நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்குமா? இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக, வெங்காயம், எண்ணெய் வகைகளை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது என்பார்கள்.. பாலை ஃபிரிட்ஜில் வைத்தாலும்கூட சிலசமயங்களில் கெட்டுவிடும். பிரிட்ஜின் கதவின் உட்புறமுள்ள பாட்டில் ஹோல்டர்களில் பால் பாக்கெட்டுகளை வைத்தாலும் கெட்டுப்போகிறது.

பிரிட்ஜில் பால் பாக்கெட் வெக்கறீங்களா
இதற்கு காரணம், ஃபிரிட்ஜ்ஜை அடிக்கடி திறந்து மூடும்போது, வெப்பமும், உள்ளிருக்கும் குளிர்ச்சியும் என மாறி மாறி ஏற்பட்டு, பாலில் உள்ள பாக்டீரியா வளர காரணமாகிவிடும். எனவே, ஃபிரிட்ஜ் உள்பக்கம், அல்லது ஃப்ரீசருக்குள் பால் பாக்கெட், பால் பாத்திரத்தை வைப்பது நல்லது. பாக்டீரியாக்களும் நுழைய முடியாது.
அதேபோல மருந்துகளையும் பிரிட்ஜில் வைப்பார்கள்.. மருந்தையும் வைத்துவிட்டு, அதிலேயே சாப்பாட்டு பொருட்கள், இறைச்சி, பூக்களை வைக்கக்கூடாது. காரணம், மருந்துகளில் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அவற்றின் தன்மை மாற வாய்ப்புள்ளது.
மருந்து பொருட்கள் வீரியம்
ஆனால் உண்மையிலேயே பிரிட்ஜில் மருந்துப் பொருட்களை வைப்பது சரியானதா? இது குறித்து சிங்கப்பூரின் புகழ்பெற்ற சுகாதார இணையதளமான 'ஹெல்த் எக்ஸ்சேஞ்ச்' (HealthXchange) சமீபத்தில் சில மருத்துவத் தகவல்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
அதில், "பெரும்பாலான மாத்திரைகள் மற்றும் சிரப்கள் சாதாரண ரூம் வெப்பநிலையிலேயே இருக்கும்படிதான் தயாரிக்கப்படுகின்றன. அவைகளை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கும்போது, சில மருந்துகளின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பிரிட்ஜின் கதவை அடிக்கடி திறந்து மூடுவதால் ?
நாம் பிரிட்ஜின் கதவை அடிக்கடி திறந்து மூடுவதால் உள்ளே இருக்கும் வெப்பநிலை நிலையற்றதாக மாறுகிறது. இந்தத் தொடர் வெப்பநிலை மாற்றம் மற்றும் பிரிட்ஜில் இருக்கும் ஈரப்பதம் ஆகியவை சில மருந்துகளின் வீரியத்தை அல்லது ஆற்றலை மிக வேகமாக வீழ்த்தி விடுகின்றன. இதனால், நாம் நோய்க்காக உட்கொள்ளும் மருந்து, உடலில் முழுமையான பலனைத் தராமல் போகும் சூழல் உருவாகி விடும்.
காப்ஸ்யூல் வகை மாத்திரைகள்
அதிலும் காப்ஸ்யூல் வகை மாத்திரைகள் குளிர்ச்சியான காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி, ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு. அதேபோல், சிரப் மருந்துகளைத் தேவையின்றி குளிர்ச்சியான சூழலில் வைக்கும்போது, சில தயாரிப்புகளில் அதன் கலவைத்தன்மை பாதிக்கப்படலாம்.
அப்படியானால் எதை பிரிட்ஜில் வைக்க வேண்டும்? எந்தவொரு மருந்தின் அட்டையிலும் அல்லது பாட்டிலிலும் "Refrigerate" (குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்) என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அதனை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
ஹார்மோன் ஊசிகள்
உதாரணமாக, இன்னும் ஓப்பன் செய்யப்படாத இன்சுலின் பாட்டில்கள், ஐ.வி.எஃப் (IVF) சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட ஹார்மோன் ஊசிகள் மற்றும் சில கண் சொட்டு மருந்துகளை (Eye drops) மட்டுமே குளிர்ச்சியான சூழலில் பராமரிக்க வேண்டும். ஆனால், இவற்றைக்கூட பிரீசருக்குள் வைத்து உறைந்துவிடக் கூடாது (Do not freeze).
அதேபோல், கதவை அடிக்கடி திறப்பதால் வெப்பநிலை மாறும் என்பதால், கதவுப் பகுதியிலோ அல்லது கூலிங் வென்ட் அருகிலோ வைக்கக் கூடாது. குளிர்சாதனப் பெட்டியின் நடுப்பகுதியில் (Main compartment) வைப்பதே முறையான வழிமுறையாகும்.
சாதாரண காய்ச்சல், தலைவலி மாத்திரைகளை நேரடி சூரிய வெளிச்சம் படாத, ஈரப்பதம் இல்லாத, சுத்தமான அலமாரிகளில் அறை வெப்பநிலையில் வைப்பதே பாதுகாப்பானது. மருந்துகளின் லேபிள்களில் கொடுக்கப்பட்டுள்ள சேமிப்பு வழிமுறைகளைப் படித்து, மருத்துவர் அல்லது மருந்தாளரின் ஆலோசனையைப் பின்பற்றுவதே சரியான முறையாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications