சகட்டுமேனிக்கு பரவும் காய்ச்சல்.. நிரம்பி வழியும் தமிழக மருத்துவமனைகள்! டாக்டர்களின் அட்வைஸ் இதுதான்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலான இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோல விரைவில் பனிக்காலமும் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த சீசனில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழையை பெறும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட -19% முதல் +19% கூடுதல் குறைவாக மழை பெய்தால் அது இயல்பான அளவு என கணக்கிடப்படுகிறது.

அதேபோல திருநெல்வேலி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் இந்த மூன்று மாவட்டங்கள் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் 20% முதல் 59% வரை அதிக மழையை பெற்றிருக்கின்றன. ஆனால் அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்கள் வழக்கத்தை விட 20% முதல் 59% வரை குறைவான மழை அளவை பெற்றிருக்கின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்கள் இயல்பான அளவில் மழையை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் வரும் 19ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடைந்திருந்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. மட்டுமல்லாது அடுத்த 36 மணி நேரத்தில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் பனிகாலம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
தீவிரமாக பரவி வரும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளை நோக்கி மக்கள் படையெடுத்துள்ளனர். இது தவிர மாநிலம் முழுவதும் சுமார் 5,000 பேருக்கு டெங்கு பாதிப்பு இருக்கிறது. இந்நிலையில் வைரஸ் காய்ச்சல் குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறுகையில், "காலநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் அதிகமாக உள்ளது. வைரஸ் குளிர்காலத்தில் நன்றாக வளரும் குறிப்பாக சளி ஏற்படுத்தும் வைரஸ், சுவாச ஒத்திசைவு வைரஸ் உள்ளிட்ட வைரஸ்கள் நுரையீரல் பாதித்தால் காய்ச்சல் சளி போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி சுத்தமில்லாத குடிநீர் குடிக்கும்போது, சுகாதாரமற்ற உணவை உண்ணும்போதும் வைரஸ் பரவி காய்ச்சல் ஏற்படுகிறது.

காய்ச்சல் ஏற்பட்ட பிறகு உடலை நன்றாக கவனிக்க வேண்டும், குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு அனுப்பக்கூடாது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், 2 நாட்களுக்கு மேல் பாதிப்பு தொடர்ந்து இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், சுயமாக மருந்து எடுத்துக்கொள்ள கூடாது, மருத்துவ ஆலோசனை படி மட்டுமே மருந்து அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி சரியாக செலுத்தி இருக்க வேண்டும், ஆஸ்துமா உள்ள நோயாளிகள் காலை பணியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போதிய காலகட்டத்தில் இதை எல்லாம் முறையாக பின்பற்ற வேண்டும். மழை காலம் வர இருப்பதால் எலி காய்ச்சல் பரவும் எனவே அதற்கும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications