திமுகவுக்கு தண்ணி காட்டிய "இரட்டை இலை".. இன்னமும் மவுசு குறையாத மாஸ்!
இரட்டை இலை சின்னத்துக்கு வேலூரில் மவுசு குறையவில்லை
சென்னை: திமுக வெற்றியை பெற்றிருப்பினும், அதிமுகவினர் சந்தோஷப்பட ஒரு செய்தி இங்கு உண்டு. அது இரட்டை இலை, உதயசூரியனுக்கு தண்ணீர் காட்டியதுதான்.
நேற்று காலை வாக்கு எண்ண ஆரம்பித்து 3 மணி நேரத்துக்கு ஏசிஎஸ்தான் லீடிங். அதற்குக் காரணம் கிராமப்புற வாக்குகள் இரட்டை இலைக்கே கிடைத்ததுதான். இதன்மூலம் அதிமுகவின் செல்வாக்கும் உயர்ந்து உள்ளது தெரிகிறது.

ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியே ஏடாகூடமாகி விட்டது என்று சலசலக்கப்பட்டது... இங்கிருக்கும் பலர் பிரிந்து அமமுக என்ற ஒருகட்சி உருவாகும் நிலை ஏற்பட்டது... இரட்டை தலைமை என்ற ஆதிக்கத்தின் பிடியில் அதிமுக சிக்கி உள்ளதாக சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.
இவ்வளவு இருந்தும் இரட்டை இலைக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பதைதான் இந்த தேர்தல் காட்டி உள்ளது. ஏனென்றால், ஏசி.சண்முகம், 4.77 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளார். அதாவது மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். இது ஒரு வகையில் வெற்றி என்றுகூட சொல்லலாம்.
நூலிழையில் இது தவறி இருந்தாலும், திமுகவை விட அதிமுகவின் அந்தஸ்தும், மரியாதையும் கிராம புற மக்கள் தந்து கொண்டே இருப்பதுதான் உண்மை. கடந்த முறை ஜெயலலிதா, விட்டு சென்ற ஓட்டுசதவீதத்தை அப்படியே இந்த முறையும் அதிமுக அள்ளி உள்ளது அக்கட்சியின் ஒவ்வொரு தொண்டனுக்கும் பெருமையை தந்து வருகிறது.
நேற்று காலை முதல் 3 மணி நேரம் வரை துரைமுருகனுக்கு மரண பயத்தை அதிமுக காட்டியதற்கு காரணமே இந்த இரட்டை இலைதான்... இந்த இரட்டை இலைக்கான மவுசு இப்போது மட்டுமல்ல.. எப்போதுமே குறையாது என்பதும் தெளிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications