"உன் மதனி வாயை பிராண்டி! முட்டியை லாக் செய்து"! போலீஸ்கார அண்ணன் சொல்ல சொல்ல சிரித்த தங்கை! ஆடியோ!
சென்னை: மதுரையில் தனியார் பள்ளி ஆசிரியை தங்கப்பிரியா வரதட்சணைக் கொடுமையால் போலீஸ்கார கணவரால் தாக்கப்பட்ட சம்பவத்தில், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தனது மனைவியைப் பூபாலன் என்னென்ன கொடுமைகள் செய்தார் என்று அவர் அண்ணன் சொல்ல, தங்கை அனிதா சிறிதும் பதற்றமே இல்லாமல் சிரித்துக் கொண்டே கேட்ட அதிர்ச்சி ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் மற்றும் பின்னணி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் செந்தில்குமரனின் மகன் பூபாலன், மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக இருக்கிறார். பூபாலனுக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தங்கப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், பூபாலன் தனது மனைவியைத் தனி அறையில் அடைத்து வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த தங்கப்பிரியா, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பிறகும், தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு, அவரைக் கொடுமைப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
அதிர்ச்சி தரும் ஆடியோ உரையாடல்
தனது தாயிடம் பூபாலன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பூபாலனின் தாய் விஜயா, "உன் கல்யாணத்திற்கு வெறும் ₹50 ஆயிரம் கொடுத்தார்கள். அவர்களது மகனுக்கு மட்டும் நன்றாகத் திருமணம் செய்துள்ளார்கள். இதை நீ நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேட்க வேண்டியதுதானே?" என்று சிறிதும் கூச்சமில்லாமல் கேட்கிறார்.
அதற்குப் பூபாலன், "எதற்கு, மாமனாரிடம் (ஒருமையில் பேசுகிறார்) எத்தனை முறைதான் கேட்பது?" என்கிறார். அதற்கு விஜயாவோ, "உன் பொண்டாட்டியிடம் தான் கேட்க வேண்டும். 'பின்னாடி செய்கிறேன், பின்னாடி செய்கிறேன்'னு ஒன்றையும் கிழிக்கல" என்கிறார்.
"நான் செய்த கொடுமைகளை எல்லாம் இந்நேரம் எல்லாரிடத்திலும் சொல்லியிருப்பாள்" என்கிறார் பூபாலன். அதற்கு விஜயாவோ, "ஆமாம், உன் பொண்டாட்டிக்குச் சொல்லித்தரணுமா, குத்துறது, முனகுறதுனு எல்லாத்தையும் சொல்லியிருப்பாள்" என்கிறார்.
இப்படிப் பெண்ணாக இருந்து கொண்டு மகனைத் தூண்டிவிட்ட மாமியார் ஒருபுறமிருக்க, அண்ணிக்கு உடலில் காயம் என கேள்விப்பட்டதும் துடிக்க வேண்டிய நாத்தனார், காதில் தேன் பாய்ந்தது போலச் சிரித்தபடியே கேட்டுவரும் ஆடியோவும் வெளியாகி பதைபதைக்க வைக்கிறது.
நாத்தனார் அனிதாவுடன் உரையாடல்
அந்த ஆடியோவில் பூபாலன் தனது தங்கை அனிதாவுடன் பேசும் பகுதி இதோ:
தங்கை அனிதா: "என்ன மதனிக்கு வாயெல்லாம் வீங்கிக் கிடக்காம்ல, எப்படி வந்திருக்க?" (சிரிக்கிறார்)
பூபாலன்: "வாய் மட்டுமில்லை, மூஞ்சியே மாறிப்போயிடுச்சு!"
அனிதா: "அழுது அழுதே மூஞ்சி மாறிப்போச்சா?"
பூபாலன்: "அழுது அழுது இல்லை, பிராண்டிவிட்டு மாறிவிட்டது."
அனிதா: "அந்த அளவுக்குப் பிராண்டீட்டியா?"
பூபாலன்: "ஆமாம் (சிரிக்கிறார்). அவ பேசினாலே எரிச்சலா இருக்கு. இதனால் வாயைப் பொத்திப்பொத்தி, நகத்தால் கீறிக் கீறி வாயெல்லாம் புண்ணாகிவிட்டது. ஓவரா கத்தினால், உடனே தொண்டையைப் பிடிச்சி நெம்பிவிட்டேன், பிறகு வலிக்குது வலிக்குதுன்னு கத்துறா."
பூபாலன்: "காலை வைத்து லாக் செய்ததில் முட்டி லாக் ஆகிடுச்சு."
அனிதா: (பதறாமல் சிரித்தபடியே) "யாருக்கு?"
பூபாலன்: "அவளுக்குத்தான். தாங்கித் தாங்கி நடக்குறா. அவ உடம்பே 10 பேர் சேர்ந்து அடிச்சுப் போட்ட மாதிரி இருக்கு. உடம்பே நல்ல பாம்பு போல் சுருட்டிக்கிட்டு இருக்கு! நல்லா வச்சு மிதிச்சுட்டேன். உதட்டில் வேறு ஏகப்பட்ட காயங்கள்."
அனிதா: "சொல்லி வச்சுடு, வாய் ஓவரா பேசினால் இப்படித்தான் இருக்கும்."
இவ்வாறு அதிர்ச்சி அடைய வைக்கும் இந்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தங்கப்பிரியாவின் புகாரின் பேரில், அவரது கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications