கிட்னி பேஷன்ட்டுக்கு டயாலிசிஸ் இல்லை.. இயற்கை முறையில் சிகிச்சை.. அசத்தும் அரசு யோகா மருத்துவமனை
சென்னை: டயாலிசிஸ் மூலம் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை அகற்றி வந்த நோயாளி ஒருவர் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் இயற்கை முறையில் சிகிச்சை எடுத்து தற்போது டயாலிசிஸ் இல்லாமலேயே அவரது உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும் அளவுக்கு சிறப்பானதொரு சிகிச்சையை அரசு யோகா மருத்துவமனையின் கைநுட்பத் துறை தலைவர் டாக்டர் ஒய் தீபா கொடுத்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் ஒரு 6 முதல் 8 மாதங்களுக்கு முன் திருவொற்றியூரை சேர்ந்த சுதாகரன் என்பவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாகவே இருந்தது. இதனால் அவர் தினமும் இன்சுலின் ஊசியை செலுத்தும் நிலையில் இருந்தார்.
ஒரு நாளைக்கு 20 யூனிட்கள் என 5 முறை இன்சுலின் செலுத்தி கொள்ள வேண்டும். எனினும் அவருக்கு சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கவில்லை. அவருக்கு சர்க்கரை அளவு மட்டும் அல்லாமல் ரத்த கொதிப்பும் அதிகமாகவே இருந்தது. கொலஸ்ட்ராலும் அதிகமாகவே இருந்தது. இதனால் அவரது சிறுநீரகம் பழுதடைந்து டயாலிசிஸ் செய்து கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்ற நிலை இருந்தது. இவர் ஒரு மாதத்திற்கு முன்னர் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சையை தொடங்கினேன்.
என்னுடன் பணிபுரிந்தவர்கள் எல்லாம் இவருடன் அட்டன்டர் இல்லாமல் உள் நோயாளியாக அனுமதிக்க வேண்டாம் என்றார்கள். ஆனால் நான் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக நான் தைரியமாக அவரை உள்நோயாளியாக சேர்த்தேன். கடந்த ஒரு மாதமாக அவருக்கு நாங்கள் சிகிச்சை அளித்தோம். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் அவரது மன அழுத்தத்தை குறைத்தோம்.
அவருடைய சர்க்கரையின் அளவை குறைப்பதில் நான் கவனம் செலுத்தினேன். இதனால் சர்க்கரையின் அளவை குறைப்பதன் மூலம் அவருக்கு சிறுநீரக பிரச்சினையை சரி செய்துவிடலாம் என நினைத்தேன். அவருக்கு தொடர்ந்து அளித்த சிகிச்சையால் அவரது கொலஸ்ட்ரால் அளவு குறைந்தது. சர்க்கரை அளவும் குறைந்ததால் அவருக்கு கொடுக்கப்படும் இன்சுலின் அளவை குறைத்தேன். வாரத்திற்கு ஒரு முறை அவருக்கு சர்க்கரை, யூரியா, கிரியாட்டினைன் உள்ளிட்டவற்றை செக் செய்தோம்.
எங்களது சிகிச்சையால் அவருக்கு சர்க்கரையின் அளவு குறைந்தது. அவர் எடுத்துக் கொண்டிருந்த ரத்தக் கொதிப்பு, கொலஸ்டிராலுக்கான மாத்திரைகளை நிறுத்திவிட்டோம். இதன் மூலம் கிளாமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதாவது யூரியா, கிரியாட்டினைன், யூரிக் ஆசிட் ஆகிய உப்புகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுவதற்கான ஃபில்டிரேஷன். 15 க்கு கீழ் இருந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது அர்த்தம்.
இவருக்கு கிளாமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட் 15 க்கு கீழ் இருந்தது. தொடர் சிகிச்சையால் இவருடைய ஃபில்ட்ரேஷன் ரேட் 22 க்கு வந்துள்ளது. இது மிகவும் நல்ல விஷயம். இன்சுலினையும் நிறுத்திவிட்டோம். டயாலிசிஸ் சிகிச்சை இல்லாமலேயே அவருக்கு மேற்கண்ட உப்புகளின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். அவருக்கு சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்கும் நீர் சிகிச்சை (ரீனல் பேக்) கொடுத்தோம். அக்குபங்ஷர், மாக்ஸா தெரபி (Moxa therapy), சீடு தெரபி (Seed therapy), ஆரிக்குலர் தெரபி, சர்க்கரையின் அளவை குறைக்க அரோமா எண்ணெய்யை பயன்படுத்தி மெரிடியன் மசாஜ் (meridian massage) கொடுத்தோம்.
யோகா சிகிச்சைகளையும் கொடுத்து உணவு கட்டுப்பாட்டையும் கொண்டு வந்தோம். இடுப்பு குளியல், இயற்கை உணவுகள் மூலமாக யூரியா, கிரியாட்டினைனை கட்டுப்படுத்த முடிந்தது. டயாலிசிஸ் இல்லாமல் இயற்கையான முறையிலும் சிறுநீரக செயல்பாட்டை நல்ல முறையில் கொண்டு வர முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இது என்றார் டாக்டர் தீபா.
இதுகுறித்து சிகிச்சை பெற்று வரும் சுதாகர் கூறுகையில் எனக்கு 10 முதல் 15 ஆண்டுகளாக சர்க்கரை நோயும், 4 முதல் 5 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பும் இருந்து வருகிறது. இதனால் சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. மருத்துவமனைகளில் ஆலோசனை செய்த போது கிட்னி 85 சதவீதம் சேதமடைந்துவிட்டதால் டயாலிசிஸ் செய்ய வேண்டும் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிவிட்டனர்.
எனது சகோதரர் மூலம் டாக்டர் தீபாவை சந்தித்து அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து ஒரு மாதம் சிகிச்சை மேற்கொண்டேன். மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னர் எனது கிரியாட்டினைன் அளவு 5.1 ஆக இருந்தது. சிகிச்சைக்கு பிறகு எனக்கு 3.25 ஆக இருக்கிறது. தற்போது இன்சுலினும் மாத்திரையும் போடுவதில்லை. எல்லாமே கட்டுக்குள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார்.