அறுசுவை என்றால் என்ன?.. அறுசுவையால் ஏற்படும் மருத்துவ குணங்கள் என்ன?..விவரிக்கிறார் டாக்டர் கவுதமன்
சென்னை: நாம் அன்றாடம் உண்ணும் உணவு குறித்தும் அதன் அறுசுவைகள் குறித்தும், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கவுதமன் விவரிக்கிறார்.
Recommended Video
இதுகுறித்து டாக்டர் கவுதமன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நமது மருத்துவத்தின் அடிப்படை சித்தாந்தமே நாம் உண்ணுகிற உணவு, அதன் சுவை, அந்த சுவை எவ்வாறு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வியாதிகள் என வரும்போது அதற்கு கொடுக்கக் கூடிய மருந்துகள் என பார்த்தோமேயானால் பித்தம் அதிகமாக இருக்கும் போது கசப்பு சுவை கொண்ட உணவுகளை கொடுப்போம்.
வாதம் அதிகமாக இருக்கும் போது இனிப்பு சுவையான உணவுகளும் கபம் அதிகமாக இருக்கும் போது காரம் சம்பந்தப்பட்ட உணவுகளும் துவர்ப்பு சம்பந்தப்பட்ட உணவுகளும் கொடுக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்னவெனில் ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு பஞ்சபூதத்தில் இருந்து உருவாவது.
உறுப்பு
அவ்வாறு உருவாகும் போது அதனுடைய குணம் நேரடியாக உடலில் சென்று உடல் சார்ந்த பஞ்ச பூத கோட்பாடுகளின்படி உருவான உறுப்புகளில் அதன் செயலாக்கம் இருக்கும். அந்த வகையில் அறுசுவை என்றால் என்ன என்பதை பார்ப்போம். இந்த அறுசுவை நமக்கு எவ்வாறு ஆரோக்கியத்தை நல்குகிறது என்பதையும் பார்ப்போம்.
முதல் சுவை காரம்
முதலில் காரச்சுவையை பார்ப்போம். காரத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது. ஆனால் அதீத காரம் சாப்பிடும் போது வயிற்றில் புண்கள் ஏற்படுவதிலிருந்து நிறைய பிரச்சினைகள் ஏற்படும். காரத்தின் முக்கியமான குணமே உணர்ச்சிகளை கூட்ட கூடியது. வியர்வையை உருவாக்கக் கூடியது. அதே நேரத்தில் மிக அதிகமான காரம் சாப்பிடும்போது நமது உணர்ச்சிகள் குறைந்து போய்விடும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, கடுகு- இவையெல்லாம் அதிக காரச்சுவை இருக்கக் கூடிய உணவுகளாகும். இவை செரிமான சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நாம் உபயோகப்படுத்துவோம்.
இரண்டாவது சுவை கசப்பு
அடுத்தது கசப்பு சுவை- கசப்பு என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது நிலவேம்பு, பாகற்காய். இதன் முக்கியமான குணம் என்னவெனில், உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தக் கூடிய கிருமிகளை அழிக்கக் கூடிய அழகான மருந்து. சளியை கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள் பெரும்பாலும் கசப்பு சுவையுடன் இருப்பதை நாம் பார்க்கிறோம். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வேம்பு, நிலவேம்பு, ஆடாதோடை ஆகியவை கசப்பு தன்மை கொண்டவையாகும்.
மூன்றாவது சுவை இனிப்பு
அடுத்தது இனிப்பு சுவை- இந்த சுவையை விரும்பாத மனிதனே இந்த உலகத்தில் இல்லை என சொல்லலாம். உடலுடைய பலத்தை கூட்டி , உடலுடைய தசையை கூட்டி வாதத்தை குறைக்கக் கூடிய அழகான ஒரு பொருள் இனிப்பு சுவையாகும். குழந்தைகளுக்கு நாம் இனிப்பு அதிகமாக கொடுக்க காரணமே அவர்களுடைய பலம் அதிகமாக இருப்பதற்காகத்தான். ஒரு நல்ல காரியத்தின் போது நாம் ஏன் இனிப்பை முதலில் கொடுக்கிறோம். அது ஏன், அவர்களுடைய உடலும் மனதும் மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தான். இனிப்பை விட சிறந்த உணவு உலகில் ஒன்றுமே இல்லை எனலாம். உடலுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய முக்கியமான விஷயங்களில் இனிப்பு ஒன்று.
நான்காவது சுவை புளிப்பு
அடுத்தது புளிப்புச் சுவை- உடலுடைய ரத்த ஓட்டத்தை தூண்டி ரத்த குழாய்களில் இருக்கக் கூடிய அடைப்புகளை நீக்கக் கூடிய அழகான மருந்துகளில் ஒன்று புளிப்பு. நாக்கில் சுவை தெரியாத போது புளிப்பு சுவையை கொடுப்போம். எலுமிச்சை, இட்லி, தோசை மாவு, புளி, மாங்காய் உள்ளிட்டவை புளிப்பு சுவையுடையதாகும். புளிப்பு ஜீரண மண்டலத்தை தூண்டக் கூடியதாகும். பாதையில் இருக்கக் கூடிய அடைப்புகளை நீக்கக் கூடியது. இதய நோய் உள்ளிட்ட பெரிய நோய்கள் வரும் போது புளிப்பு சுவை இருக்கக் கூடிய மருந்துகளைத்தான் நாம் சாப்பிடுகிறோம்.
5-ஆவது சுவை துவர்ப்பு
அடுத்தது துவர்ப்பு சுவை- துவர்ப்பு என்றால் சம்மணம் என சொல்வோம், அதாவது நிறுத்திவிடுவது என்பது அர்த்தமாகும். துவர்ப்பான பழங்களை சாப்பிட்டால் அடுத்த நாள் மலமே வராது. உடலில் இருந்து ரத்தம் வெளியேற கூடியதை தடுக்கக் கூடிய சக்தி துவர்ப்பு சுவைக்கு உண்டு. அதிக மாதவிலக்கு ஏற்படும் போது மாதுளை பழத்தையும் வாழைப்பூவையும் அரைத்து சாப்பிட சொல்வோம். இதை சாப்பிட்டால் உடனே நின்று போய்விடும். வாழைக்காய், மாதுளை, மாவடு ஆகியவை துவர்ப்பு சுவையுடைய உணவுகளாகும். அந்த காலத்தில் யாருக்காவது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மாவடுவை மோர் சாதத்துடன் தொட்டு சாப்பிட சொல்வார்கள். சாப்பிட்ட அடுத்த 5 நிமிடத்தில் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
6ஆவது சுவை உப்பு
அடுத்தது உப்புச் சுவை- குறைவாக இருந்தாலும் உப்பற்ற உணவை நாம் சாப்பிட முடியாது. அதிகமாக இருந்தாலும் சாப்பிட முடியாது. உப்பு என்பது உடலின் ஆதாரம். உப்பு குறைந்த அளவு தேவைப்படுவதாக இருந்தாலும் கூட நமக்கு உதவி செய்யக் கூடிய அழகான ஒரு மருந்து. உப்பு அற்ற ஒரு உணவை நாம் மருந்தாகக் கூட சாப்பிட முடியாது. வெடித்து போகக் கூடிய சக்தி உப்பிற்கு உண்டு. உடலில் இருக்கக் கூடிய கொழுப்பை கரைக்க கூடிய சக்தி இதற்கு உண்டு. உடலில் இருக்கக் கூடிய திசுக்களை கரைக்கக் கூடிய சக்தி உள்ளது. கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பீட்ரூட் ஆகியவை உப்பு அதிகமாக இருக்கக் கூடிய உணவுகள்.
அறுசுவைகள்
இந்த 6 சுவைகளை தனித்தனியாக இருக்கும் போது ஒவ்வொரு குணத்தை கொடுக்கிறது. இவை அனைத்தும் ஒன்றாக சேரும் போது மிகப் பெரிய அளவில் உடலில் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய விஷயத்தை செய்கிறது. இன்று அறுசுவைக்கு பதிலாக ஒரு சுவையை மட்டுமே சாப்பிடுகிறோம். அதிலும் கசப்பு சாப்பிடும் பழக்கம் நம்மிடத்தில் இல்லை. இனிப்பு, உப்பு, காரம் மிகுதியாக சாப்பிடுகிறோம். துவர்ப்பு மிகக் குறைவாக சாப்பிடுகிறோம். எனவே காரம், இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய 4 சுவைகளை மட்டுமே நாம் சாப்பிடுவதால்தான் வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுகிறோம் என்றார்.