கோவையில் கோயில்கள் சேதம்- மத மோதல்களை தூண்ட சதி: ராமதாஸ் சாடல்! வைகோ, கே.எஸ். அழகிரி கண்டனம்!
சென்னை: தமிழகத்தில் கோயில்களை சேதப்படுத்தியும், கடவுள்களை இழிவுபடுத்தியும் மத மோதல்களைத் தூண்ட சதிகள் நடைபெறுகின்றன என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல் மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கோவை ரயில்நிலையம் விநாயகர் கோயில், டவுன்ஹால் மாகாளியம்மன் கோயில், நல்லாபாளையம் செல்வ விநாயகர் கோயில் ஆகியவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை தேவை!
கோவையில் கோவில்கள் முன்பு டயர்கள் எரிப்பு- சிசிடிவியில் சிக்கிய சேலம் கஜேந்திரனுக்கு போலீஸ் வலை
தமிழகத்தில் மதமோதல் சதி
தமிழகத்தில் கோயில்களை சேதப்படுத்தியும், கடவுள்களை இழிவுபடுத்தியும் மத மோதல்களைத் தூண்ட சதிகள் நடக்கின்றன. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும். மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்! இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
அதிர்ச்சி தரும் தகவல்
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை: கோவையில் தந்தை பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் களங்கப்படுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து அதே பகுதியில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
உடனே கைது செய்க
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்கள் உணர்வுகளை புண்படுத்துகிற நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். சி.சி.டி.வி. காமரா பதிவுகள் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட வேண்டும். இவ்வாறு கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
கண்டனத்துக்குரியது- வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: கோயம்புத்தூரில், டவுன்ஹால் ஐந்து முக்குப் பகுதியில் உள்ள மகாளியம்மன் கோவில், கோவை இரயில் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில், கோட்டை மேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகில் உள்ள விநாயகர் கோவில், நல்லாம்பாளையம் செல்வவிநாயகர் கோவில் ஆகிய நான்கு கோவில்களின் வாசல்களிலும் நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களின் டயர்களை தீ வைத்து எரித்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து, அராஜகம் ஏற்படுத்துகின்ற அக்கிரமத்தில் ஈடுபட்டவர்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
|
கயமை செயலில் ஈடுபட்ட வன்முறையாளர்கள்
கோவில் வளாகங்களில் கரும்புகை படிந்துள்ளது. இந்தக் கயமைச் செயலில் ஈடுபட்ட வன்முறையாளர்களை தமிழக காவல்துறை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரியான செயல்கள் அனைத்துத் தரப்பினராலும் கண்டிக்கத்தக்க இழி செயலாகும். இவ்வாறு வைகோ சாடியுள்ளார்.
வாசன் கடும் கண்டனம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கும் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த செயல் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவும், மதக் கலவரங்களை உருவாக்கும் வகையில் திட்டமிட்டு நடைபெறுகிறது. கோவில்களை சேதப்படுத்துவது, இந்து மதத்தினரின் உணர்வுகளையும், மத நம்பிக்கையும் நோகடிப்பதாக உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்
மதவேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் தமிழகத்தில், மக்கள் மத்தியில் இச்செயல் மிகுந்த குழப்பத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் செய்திகளை வெளிடுவதும், கோவில்களை சேதப்படுத்துவதும், மதங்களை அவமதிப்பதும் மிகவும் கண்டிக்கதக்கது. தவறு செய்தவர்களை உடனடியாக கண்டுப்பிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை அளிக்க வேண்டும். இந்த விரும்பதாகாத செயலில் ஈடுப்பட்டவர்களை தமிழக அரசு இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.