"தோட்டத்தில் பச்சை கிளிகள்.. மயில்கள்.. விடை தேட வேண்டிய வினாக்கள்".. தைலாபுரத்தை நெகிழ்ந்த ராமதாஸ்
தைலாபுரம் தோட்டம் குறித்து டாக்டர் ராமதாஸ் பதிவு போட்டுள்ளார்
சென்னை: உலகின் பல மூலைகளில் இருந்து ஓரிடத்தில் ஒன்று கூடும் அளவுக்கான தகவல் தொடர்பு எவ்வாறு சாத்தியமாகிறது? என்பவையெல்லாம் வியககவைக்கும், விடை தேடப்பட வேண்டிய வினாக்கள் என்று டாக்டர் ராமதாஸ் தன்னுடைய தைலாபுரம் தோட்டத்தினை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸூக்கு சொந்த ஊர் திண்டிவனம் பக்கத்தில் உள்ள கீழ்சிவரி ஆகும்... சொந்தமாக கிளினிக் நடத்தி வந்தாலும் விவசாயம் என்றால் ராமதாசுக்கு உயிர்.. பிடித்த தொழிலும் கூட.
வைத்தியம், விவசாயம் இரண்டுமே அவரது பிரதான தொழிலாக இருந்தது.. இதற்கு பிறகுதான், தைலாபுர தோட்டத்திலேயே நிரந்தரமாக தங்கினார்..

பதிவு
மொத்த இடத்திலும் செடி, கொடி, மரம் என பச்சை பசேல் என மாற்றினார்.. இந்த தோட்டத்தில்தான் வருடந்தோறும் குடும்பத்தினருடன் பொங்கல் விழா நடத்தி வருகிறார்.. இந்நிலையில், சென்னை வியக்க வைக்கும் பச்சைக்கிளிகள் மற்றும் பறவைகளின் தகவல் தொடர்பு என்ற தலைப்பில், தனது தைலாபுரம் தோட்டம் பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். அந்த பதிவு இதுதான்:

தைலாபுரம்
"தைலாபுரம் தோட்டத்தில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்திருக்கிறோம். உரம், பூச்சி மருந்து பயன்படுத்தாமல் இயற்கை முறையில் தான் நெல்லை சாகுபடி செய்திருக்கிறோம். நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த மாத மத்தியில் பெய்த தொடர் மழையில் நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்து விட்டன. மழையால் அவற்றை அறுவடை செய்யவும் முடியவில்லை.

நடனம்
அந்த நேரத்தில் ஏராளமான மயில்கள் அங்கு முகாமிட்டன. அவற்றுக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெற்பயிர்கள் நல்ல உணவாகியுள்ளன. மயில்கள் மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்தன. அடுத்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகள் அங்கு முகாமிட்டன. அவற்றுக்கும் நெற்பயிர்கள் உணவாயின. இப்போது நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுவிட்டன. வழக்கமாக கிடைப்பதை விட பாதியளவு தான் விளைச்சல் கிடைத்தது.

வேடந்தாங்கல்
வயலில் பெருமளவு நெல்மணிகள் கொட்டிக் கிடப்பதால் அவற்றை உண்ண மயில்களும், பச்சைக் கிளிகளும் இன்னும் முகாமிட்டுள்ளன. எங்கோ ஒரு வயலில் உணவு கிடைப்பதாக இருந்தாலும், வேடந்தாங்கல் உள்ளிட்ட சரணாலயங்களில் சீசன் தொடங்குவதாக இருந்தாலும் பல்லாயிரக்கணக்கான பறவைகள் ஒன்று திரள்கின்றன. இவை ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன? உலகின் பல மூலைகளில் இருந்து ஓரிடத்தில் ஒன்று கூடும் அளவுக்கான தகவல் தொடர்பு எவ்வாறு சாத்தியமாகிறது? என்பவையெல்லாம் வியக்கவைக்கும், விடை தேடப்பட வேண்டிய வினாக்கள்" என்கிறார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications