ஊருக்கு மட்டும் உபதேசம் கூறினால் போதாது... தமிழக அரசை சாடும் மருத்துவர் ரவீந்தரநாத்
சென்னை: கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக மக்கள் பொதுவிடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ள நிலையில் அதனை அரசு முதலில் பின்பற்றியதா என்ற சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
காரணம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் நான்கு மணி நேரமாக மாவட்ட நிர்வாகம் அமரவைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பிப்ரவரி 14-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு சட்டமன்றத்தை கூட்டியிருப்பதும் பேசு பொருளாக உள்ளது.

அச்சுறுத்தல்
இன்று ஒட்டுமொத்த உலகையும் கொரோனோ என்ற ஒற்றை வார்த்தை அச்சுறுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் பீதியடையவும் செய்துள்ளது. கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல அமைப்புகள் பல முக்கிய எச்சரிக்கைகள் விடுத்து வருகின்றன. அதில், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பது பிரதானமாக உள்ளது. அதன் அடிப்படையில் பல நாடுகளிலும் அலுவலகங்கள், பள்ளிகள், மென் பொருள் நிறுவனங்கள், விடுப்பு விடப்பட்டு வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

உபதேசம்
இந்நிலையில் தமிழக அரசும் தன் பங்குக்கு தமிழக மக்களுக்கு பல நல்ல உபதேசங்களை வாரி வழங்கியுள்ளது. அது என்னவென்றால், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், பொதுவிடங்களில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும், விடுமுறை நாட்களில் குழந்தைகள் குழுவாக விளையாடுவதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும் என பல அறிவுறுத்தல்கள் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவுரை கூறுவதற்கு முன்னர் அதில் சிலவற்றையாவது அரசு கடைபிடித்ததா என்பதே சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவீந்தரநாத் முன் வைக்கும் கேள்வி.

தவறானது
உலக சுகாதார நிறுவனம் கொரோனோ ஒரு தொற்றுநோய் என அறிவுறுத்தியும் அதனை அலட்சியம் செய்யும் வகையில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் குழுமச் செய்தது கண்டனத்திற்குரியது என மருத்துவர் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய சூழலில் சட்டமன்ற கூட்டத் தொடர் அவசியம் நடைபெற வேண்டுமா என்பதையும் அரசு சிந்திக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மெத்தனம்
மேலும், கொரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் போதிய கருத்துபொதிவு இல்லை என்றும், பணத்திற்காக மிகவும் மெத்தனமாக விளம்பர நிறுவனம் அதை தயார் செய்துள்ளதாகவும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவீந்தரநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications