திராவிடர் என்பது மரபினம்.. தமிழர் என்பது தேசிய இனம்... சீமானுக்கு வகுப்பு எடுத்த தொல்.திருமாவளவன்!
சென்னை: திராவிடர் என்பது மரபினம்; அதில் தமிழர் என்பது ஒரு தேசிய இனம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பதிலளித்துள்ளார். தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன் இந்த விளக்கம் அளித்தார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும்:

கேள்வி: நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த் தாய் வாழ்த்தை நீக்கிவிடுவேன் என சீமான் கூறியிருக்கிறாரே?
திருமாவளவன்: தமிழ்த் தாய் வாழ்த்தை எடுத்துவிடுவேன் என்று அவர் (சீமான்) சொல்லவில்லை. அதற்கு பதிலாக இன்னும் சிறப்பான ஒரு தமிழ்த் தாய் வாழ்த்தை நான் நடைமுறைப்படுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால் இந்த கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.
திராவிடம் என்பது மரபினம். தமிழர் என்பது தேசிய இனம். மரபினத்துக்குள்ளேயே இருக்கிற பல்வேறு தேசிய இனங்களில் ஒன்று தமிழினம். அவ்வளவுதான். இதனை நாம் வெவ்வேறாகப் பிரிக்கத் தேவை இல்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, திராவிடம் என்றால் தமிழ்தான்; திராவிட நாடு என்றால் தமிழ்நாடுதான்; திராவிடத்தைப் பாதுகாப்போம் என்றால் தமிழைப் பாதுகாப்போம்; தமிழர்களைப் பாதுகாப்போம் என்றுதான் பொருள் என கவிதைகளையும் பாடி இருக்கிறார்.
எனவே, அந்தக் காலச் சூழலில் மாநிலங்கள் பிரிக்காத காலத்தில், மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படாத அந்தக் காலத்தில், மதராஸ் மாகாணம் என்ற போது திராவிட மொழிகள் என்ற அடிப்படையில் தென்னிந்திய மொழிகள் எல்லாம் அடையாளம் கண்டு இந்த பகுதியை திராவிட நிலம் என்று நம்முடைய முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
அதைவிட ஆரியத்துக்கு எதிரான கோட்பாடு திராவிடம்தான் என்பது பண்டிதர் அயோத்திதாசர் முன்மொழிந்த கோட்பாடு. பெரியாருக்கும் திராவிட கட்சிகளுக்கும் முன்னரே, திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். ஆகவே இதை நாம் குழப்பிக் கொள்ள தேவை இல்லை. திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம். இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications