'தமிழ்நாடு' பெயருக்கு எதிர்ப்பு- ஆளுநர் ரவிக்கு பதிலடியாக பகிரப்படும் பேராசிரியர் அன்பழகன் பேச்சு!
சென்னை: தமிழ்நாடு பெயர் வைத்தததை கடுமையாக விமர்சித்திருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டு ஆளுராக இருந்து கொண்டு இன்று தமிழகம் என பெயர் வைத்திருக்கலாம் சொல்லும் ஆர்.என்.ரவிக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்த பேராசிரியர் அன்பழகன் சட்டசபையில் ஆற்றிய உரை சரியான பதில் என்கின்றனர் திராவிடர் இயக்கத்தினர்.
தமிழ்நாட்டுக்கு பெயர் தமிழகம் என இருப்பதுதான் சரியானது; தமிழர்கள் திராவிடர்களாக நினைக்கிறார்கள். திராவிட ஆட்சியால் 50 ஆண்டுகாலமாக தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர் என்றெல்லாம் ஒரு அரசியல்வாதியாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் 1960-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பெயர் விவகாரம் தொடர்பாக மறைந்த முதுபெரும் திராவிடர் இயக்க பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் இப்போது ஆளுநர் ரவிக்கு பதிலடியாக பகிரப்பட்டு வருகிறது. பேராசிரியர் அன்பழகனின் சட்டசபை உரை:

'தமிழ்நாடு' என பெயர் வைப்பதற்கு இவ்வளவு மறுப்புச் சொல்கிறவர்கள், 'தமிழ்நாடு' எனச் சொன்னால் என்ன இழுக்கு என்று சொல்லட்டும். தமிழன் மூச்சோடு வாழ்கிற வரையில், தமிழ்நாட்டில் தமிழ் இனம் இருக்கிற வரையில், 'தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கொரு குணம் உண்டு' என்று நாமக்கல் கவிஞர் பெருமையாகப் பாடியிருக்கிற மக்கள் உள்ள வரையில் அவர்களுக்கு அடையாளமாக என்ன தரப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்.
தமிழ்நாடு என்று பெயர் வைப்பதால் பிரிவினை நின்றுவிடாது. நாட்டிற்கு பெருமை எனக் கருதுவதால்தான் தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி கேட்கிறோம். அதேபோல, சங்ககால இலக்கியங்களில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லையென சொல்வது சரியல்ல. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில், சேர, சோழ, பாண்டிய நாடுகள் தனித்தனியாக இருந்த காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இருந்திருக்கிறது.
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடல்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்றிருந்ததை அதை படித்துப் பார்த்தாலே நன்றாகத் தெரிய வரும். 'தண்டமிழ் வேலி தமிழ்நாட்டுக்கு அகமெல்லாம்' என பரிபாடலிலும், 'இமிழ் கடல்வேலி தமிழகம்' என பதிற்றுப் பத்து ஏட்டிலும், 'தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்' என சிலப்பதிகாரத்திலும் ஒலிக்கிறது.

பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டை ஆண்டு வந்த வேந்தர்கள் இப்பெயரை ஏற்றிருந்திருக்கிறார்கள். இந்த 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம் செய்யக் கோருவது திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மட்டுமே சொல்லியிருந்தாலாவது ஏற்கமாட்டேன் என நீங்கள் சொல்லலாம். தமிழ்நாடு என்ற பெயரை வைக்க வேண்டுமென்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க சொல்லியிருக்கிறார்.
விருதுநகரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் இதற்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிர் நீத்தார். தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டு அதனை காதாரக் கேட்க வேண்டும் என நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் கேட்டுக்கொண்டார்.

"தமிழ்நாடு எனும் பெயரை வைத்துத் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பெருமைப்படுத்த வேண்டும். அப்பெயரைக் கொண்டே இந்நாட்டுக்கு புகழ்முடிசூட்டவேண்டும்" என வேண்டிக்கேட்ட தமிழறிஞர்கள் பற்பல. மத்தியில் ஆட்சியில் உள்ள அகில இந்திய காங்கிரஸே இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.அப்படி இருக்கையில் இங்குள்ளவர்களுக்கு மட்டும் ஏன் மனம் வரவில்லை? முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சொல்லியும் ஏன் இந்த மறுப்பு? என கேள்வி எழுப்பி இருந்தார் அன்பழகன். தற்போது ஆளுநர் ரவிக்கு பதிலடியாக இந்த உரையை பகிர்ந்து வருகின்றனர திராவிடர் இயக்கத்தினர்.












Click it and Unblock the Notifications