போதைப்பொருள் வழக்கு.. தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை பிடித்த தனிப்படை! ரகசிய இடத்தில் விசாரணை
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதான நிலையில், நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் கிருஷ்ணாவை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தடை செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருளை பயன்படுத்திய பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மேலும் பல நடிகர்கள் நடிகைகள் சிக்க கூடும் என்று தகவல் பரவுவதால் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் கிருஷ்ணா
இதற்கிடையே, கழுகு படத்தில் நடித்த பிரபல நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அடுத்தகட்டமாக பாய்ந்துள்ளது. இவர் முன்னணி இயக்குனரான விஷ்ணுவர்தனின் தம்பி ஆவார். கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர்.
கேரளாவில் படப்பிடிப்புக்கு கிருஷ்ணா சென்றதாக தகவல் வெளியான நிலையில், அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணா ஆஜராகாவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணா ஆஜராக வேண்டும் என்று போலீஸ் சம்மன் கொடுத்த போது, அவர் நேற்று வீட்டில் இல்லை. இதனால், அவரது வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் சம்மனை கொடுத்துவிட்டு சென்றனர்.
கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை
கிருஷ்ணாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கிருஷ்ணா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் கைதான அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
துபாயில் இருந்து வந்ததும் பார்ட்டி
முன்னதாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்திடம் போலீசார் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரசாத்திடம் அடிக்கடி கொக்கைன் வாங்கி வந்ததாகவும் குறிப்பாக மூன்று முறை அவராகவே கொடுத்ததகவும் கூறினார்.
சம்பள பாக்கி தொகைக்காக கொக்கைன் கொடுத்த நிலையில், அதை பயன்படுத்திய ஸ்ரீகாந்த், அதற்கு அடிமையாகி நான்காவது முறையாக தானே கேட்டு வாங்கியதாகவும் கூறியிருந்தார். அதேபோல, துபாயில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஸ்ரீகாந்த், அன்று இரவே தனது வீட்டில் பார்ட்டி நடத்தியிருக்கிறார். அந்த பார்ட்டியில் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்.
போதைப் பொருள் பயன்படுத்தினாரா?
ஸ்ரீகாந்த் வீட்டில் நடந்த பார்ட்டியில் நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஸ்ரீகாந்தே வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தான், கிருஷ்ணாவை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். முன்னதாக கிருஷ்ணா படப்பிடிப்பு தொடர்பாக கேரளாவில் இருப்பதால் தன்னால் வர முடியாது என்று கூறினார். பின்னர் திடீரென தலைமறைவு ஆனதாக சொல்லப்படுகிறது.
அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. கேரளாவில் இருந்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே கிருஷ்ணா வேறு எங்கும் சென்று இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. தற்போது அவர் போலீசிடம் சிக்கியுள்ளார். அவர் உண்மையிலேயே போதைப்பொருள் பயன்படுத்தினாரா.. அல்லது ஸ்ரீகாந்த் கூறியது உண்மையா? என்பது தொடர்பான தகவல்கள் விசாரணைக்கு பின்னர் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications