சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடும் வறட்சியால் வறண்ட அணைகள்.. அடியோடு சரிந்த நீர் மின் உற்பத்தி.. மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Google Oneindia Tamil News

சென்னை: கடும் வெயில் தமிழகத்தின் பல இடங்களை வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது கோடை மழை பெய்தாலும் வறட்சியை சரிகட்டும் அளவிற்கான மழை இதுவாக இருக்காது என்பது நாமறிந்ததே. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் தமிழகத்தில் உள்ள நீர் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், முக்கிய நீர் ஆதாரங்கள், ஏரிகள் மற்றும் அணைகள் வறண்டு காணப்படுகின்றன. சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புழல் உள்ளிட்ட ஏரிகளில், நிலம் பாலம் பாலமாக வெடித்து காட்சியளிக்கிறது.

drought

முல்லை பெரியாறு, வைகை, பாபநாசம், சாத்தனூர் உள்பட முக்கிய அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை கைவிட்டதே, தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதற்கு காரணம். மாநிலம் முழுவதுமே அணைகள் வறண்டு காணப்படுவதால், நீர் மின் உற்பத்தியும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் சீரான மின்விநியோகம் செய்ய முடியாத சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்த வரை தற்போது 14,200 மெகாவாட் அல்லது அதற்கும் மேல் உச்சபட்ச மின்தேவையாக உள்ளது. இந்த தேவைக்காக அனல் மின்நிலையம், நீர் மின்நிலையம், காற்றாலை, சோலார் ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு, வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதில் பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் சுமார் 3,000 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் கொள்முதல் அதிக விலை கொடுத்து செய்யப்படுகிறது. மாநிலத்தில் நடைபெற்று வரும் மின் உற்பத்தியில், நீர் மின்நிலையங்களின் பங்கு அதிகமாக உள்ளது. குந்தா, காடம்பாறை, மற்றும் ஈரோடு, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நீர் மின் நிலையங்கள் உள்ளன.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கூடுதல் மின்தேவைக்கு உதவும் வகையில் இருக்கிறது. மழை காலங்களில் இங்கு அதிகபட்சமாக சுமார் 1,500 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான அணைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் நீர் மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சார உற்பத்தியின் அளவும் குறைந்துள்ளது.

கோடை வெயில் உக்கிர தாண்டவம் ஆடி வரும் நிலையில், மின்தேவையும் உயர்ந்துள்ளது. ஆனால் நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவால், பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அவப்போது ஏற்பட்டு வருகிறது. இது இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்வாரிய அதிகாரிகள், கடந்தவாரம் நீர் மின் நிலையங்களிலிருந்து 500 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் கிடைத்தது. இது தற்போது படிப்படியாக குறைந்து, 75 மெகாவாட் அளவுக்கு வந்து விட்டது. எனினும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் பெறப்படுவதால் மின்சேவையில் தடங்கல் ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
Due to the current drought, power generation in the power plants in Tamil Nadu has declined.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X