மழைக்காலம் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள இப்படியா! நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி! மக்கள் ஒரே குஷி
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னைவாசிகளுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கோடைக் காலத்தில் வெயில் வாட்டிய நிலையில், இப்போது பெய்யும் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வரும் நாட்களிலும் கூட மழை தொடரும் என்றே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைக் காலம் முடிந்தது முதலே பெய்யும் மழையால் மாநிலமே குளிர்ந்து உள்ளது.

மழை
குறிப்பாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகப் பெய்த இந்த மழை இரவு 9 மணிக்குத் தொடங்கி விடிய விடியக் கொட்டித் தீர்த்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை என பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

சென்னை
அதேபோல மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. சில இடங்களில் அதிகாலை வரையும் கூட மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. கனமழையால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், பலத்த காற்றால் பல்வேறு விமானங்களும் தாமதமானது.

செம்பரம்பாக்கம்
சென்னை மட்டுமின்றி மாநிலத்தில் பல இடங்களிலும் இதே கனமழை தான். குறிப்பாகக் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது.

முழு கொள்ளளவு
செம்பரம்பாக்கம் ஏரி சுமார் 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஏரியில் 24 அடி உயரம் வரை 3,645 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும். நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஏரி 23.36 அடியை எட்டியுள்ளது. இப்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 3475 மில்லியன் கன அடி நீர் உள்ளது. பாதுகாப்பு அளவான 23 அடியைத் தாண்டியதால் விரைவில் உபரிநீர் வெளியேற்றப்படும் எனக் கூறப்படுகிறது.

வெளியேற்றம்
ஏரியில் இப்போது 1700 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், 205 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதனிடையே ஏரியின் நீர் மட்டத்தை 23.50 அடியில் வைத்திருக்கவும் பொதுப் பணித்துறையானர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். வரும் நாட்களில் மழை தொடர்ந்தால் செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications